1,040 மாணவ, மாணவியருக்கு விலையில்லா லேப்டாப் வழங்கல்
1,040 மாணவ, மாணவியருக்கு விலையில்லா லேப்டாப் வழங்கல்
UPDATED : ஜன 20, 2026 12:34 PM
ADDED : ஜன 20, 2026 12:36 PM

கரூர்:
கரூர் தான்தோன்றிமலை அரசு கல்லூரியில் அரசின் விலையில்லா லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார்.
கரூர் எம்.எல்,ஏ.,வும் முன்னால் அமைச்சருமான செந்தில் பாலாஜி மாணவ, மாணவியர் 1,040 பேருக்கு லேப்டாப் வழங்கி பேசியதாவது:
தமிழ்நாடு அரசு எல்லா துறைகளை விட, கல்வித்துறைக்கு அதிகமான நிதிகளை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளி கல்வித்துறைக்கு மட்டும், 46,767 கோடி ரூபாய் நிதியும், உயர் கல்விக்கு, 8,494 கோடி என, 55,261 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், புதுமை பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன், காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில், 4,500 கோடி ரூபாய் அளவிற்கு புதிய திட்டங்கள் நடந்து வருகிறது. கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில் அறிவியல் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. சுங்ககேட் பகுதியில், இசை பள்ளிக்கு புதிய கட்டிடம், தான்தோன்றிமலையில் தோழி தங்கும் விடுதி கட்டும் பணி நடக்கிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

