UPDATED : ஆக 17, 2026 10:44 AM
ADDED : ஆக 17, 2026 10:44 AM
விண்வெளி வீரர்களுக்காக, 26 கோடி ரூபாய் செலவில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், 'ககன்யாத்ரி நிவாஸ்' என்ற தனிமைப்படுத்தும் கட்டமைப்பை, 'இஸ்ரோ' உருவாக்க உள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. மேலும், 'பாரதிய அந்தரிக்ஷ் ஸ்டேஷன்' என்ற பெயரில், விண்வெளி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.
விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கான பயிற்சிக்கூடம் மற்றும் தனிமைப்படுத்தும் மையம் ஆகியவை இல்லாததால், ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட விண்வெளி வீரர்களான, பிரசாந்த் நாயர், சுபான்ஷு சுக்லா, அங்கத் பிரதாப் மற்றும் அஜித் கிருஷ்ணன், ரஷ்யாவின் 'காகரின்' விண்வெளி மையத்திலும், அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்திலும் உள்ள, தனிமைப்படுத்தும் மையங்களில் பயிற்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இனி, இந்திய விண்வெளி வீரர்களுக்கு, இந்தியாவிலேயே முழுமையான பயிற்சி அளிப்பதற்காக, தனிமைப்படுத்தும் மையம் அமைக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் 26.02 கோடி ரூபாயில், 'ககன்யாத்ரி நிவாஸ்' என்ற பெயரில், தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, இஸ்ரோ 'டெண்டர்' கோரி உள்ளது.
இம்மையத்தில், விண்கலத்தில் பலமணி நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதற்கான பயிற்சி, அவர்கள் விண்வெளி செல்லும் முன், அவர்களுக்கு நோய்த்தொற்று ஏதும் ஏற்படாத வகையில் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் மருத்துவக் கண்காணிப்பு, உடற்பயிற்சி மற்றும் தங்குமிட வசதிகள், உலக தரத்தில் வழங்கப்படும்.
