மாணவர்கள் சேர்க்கை இன்றி அரசு கலைக் கல்லுாரிகள் காத்தாடுது! விண்ணப்பித்தவர்கள் வராததால் வெறிச்சோடியது
மாணவர்கள் சேர்க்கை இன்றி அரசு கலைக் கல்லுாரிகள் காத்தாடுது! விண்ணப்பித்தவர்கள் வராததால் வெறிச்சோடியது
UPDATED : ஆக 22, 2026 11:15 PM
ADDED : ஆக 22, 2026 11:17 PM
தேனி:
தேனி மாவட்டத்தில் உள்ள மூன்று அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளிலும் சில பாடப் பிரிவுகளில் மாணவர்கள் 50 சதவீதம் கூட சேரவில்லை. இதற்கு காரணம் மாநில அளவிலான கவுன்சிலிங் முறையால் விண்ணப்பித்த வெளி மாவட்ட மாணவர்கள் வரததால் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பேராசிரியர்கள் புலம்புகின்றனர்.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, வீரபாண்டி, கோட்டூர் ஆகிய ஊர்களில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகிறது. இக்கல்லுாரிகளில் இளங்கலை வகுப்புகளில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. குறிப்பாக மாணவிகள் சேர்க்கை மிக மிக குறைவாக உள்ளது.
அரசு கல்லுாரியில் இளங்கலையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 60 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி உள்ளது. ஆண்டிபட்டி கல்லுாரியில் பி.எஸ்.சி., இயற்பியலில் 40 இடங்கள், பி.எஸ்.சி., கணித பிரிவில் 35 பி.ஏ., பொருளாதாரம் பிரிவில் 15 இடங்கள் காலியாக உள்ளன.
வீரபாண்டி கல்லுாரியில் பி.ஏ., பொருளாதாரம் பிரிவில் 25 இடங்கள் , பி.காம்., வணிகவியல் பிரிவில் 12 இடங்கள், கோட்டூர் கல்லுாரியில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, வணிகவியல் உள்ளிட்ட பிரிவுகளில் 20க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
மாணவர் சேர்க்கை குறைந்தது ஏன்?
இது பற்றி கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது:
இந்தாண்டு மாநில அளவில் நடந்த கவுன்சிலிங்கில் மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வெளிமாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தேனி கல்லுாரிகளில் சேர அதிகளவில் விண்ணப்பித்திருந்தனர்.
பட்டியலில் இடம் பெற்ற மாணவர்களை தேனி கல்லுாரிகளில் சேர தொடர்பு கொண்ட போது கட்டாயம் வருவதாக தெரிவித்தனர். இவர்கள் கூறியபடி கல்லுாரியில் சேரவில்லை. அதே நேரம் இம்மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் முதலில் வெளியோன ரேங்க் பட்டியலில் இடம் பெறவில்லை. எனவே தனியார் மற்றும் உதவி பெறும் கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு சேர்ந்துவிட்டனர். இந்த விபரம் 2வது ரேங்க் பட்டியல் வெளியான போதுதான் தெரிய வந்தது.
இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. கடந்தாண்டு நடந்த நேரடி சேர்க்கையில் அதிக மாணவர்கள் சேர்ந்தனர். இந்தாண்டு நேரடி சேர்க்கைக்கு மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றனர்.
போக்குவரத்து வசதி அவசியம்:
வீரபாண்டி, கோட்டூர் கல்லுாரிகளுக்கு பஸ் வசதி குறைவு, அருகில் கடைகள் இல்லாததால் மதிய உணவு பிரச்னையால் மாணவிகள் இங்கு சேர தயங்கினர். ஆனால் மாணவர்கள் கணிசமான அளவில் சேர்க்கை இருந்தது. ஆண்டிபட்டி கல்லுாரிக்கு இந்தாண்டு வருஷநாடு, கடமலைக்குண்டு பகுதியில் இருந்து மாணவர்கள் அதிகளவில் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
