ஐ.சி.சி.ஆர்., - ஆரோவில் அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
ஐ.சி.சி.ஆர்., - ஆரோவில் அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
UPDATED : செப் 28, 2024 12:00 AM
ADDED : செப் 28, 2024 11:23 AM
வானுார் :
இந்திய கலாசார உறவுகள் சபை (ஐ.சி.சி.ஆர்.,) மற்றும் ஆரோவில் அறக்கட்டளை இடையே கலாசார பரிமாற்றத்தை வலுப்படுத்தும் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
ஐ.சி.சி.ஆர்., இயக்குநர் ஜெனரல் குமார் துஹின், துணை இயக்குநர் ஜெனரல் அஞ்சு ரஞ்சன், ஆரோவில் அறக்கட்டளையின் துணைச் செயலாளர் வஞ்சுளவள்ளி மற்றும் பாரத் நிவாஸ் அறங்காவலர் ஜன்மஜயன் ஆகியோர் முன்னிலையில் டில்லியில் உள்ள ஐ.சி.சி.ஆர்., தலைமையகத்தில் கையெழுத்தானது.
நிகழ்ச்சியில் ஆரோவில்லின் செயற்குழு உறுப்பினர் அனுராதா மற்றும் ஆரோவில் வாசிகள் பங்கேற்றனர். இந்த கூட்டணி இந்தியா மற்றும் ஆரோவில் இரண்டின் கலாசார பாரம்பரியத்தை ஊக்குவிக்கும், பன்முக கலாசாரங்கள் மற்றும் கலை வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும்.
இதுபற்றி ஆரோவில் அறக்கட்டளை துணைச்செயலர் வஞ்சுளவள்ளி கூறுகையில், உலகெங்கிலும் இருந்து கலைஞர்கள் பாரத் நிவாஸ் மற்றும் ஆரோவில்லில் தங்கள் தனித்துவமான கலாசார வெளிப்பாடுகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.
ஆரோவில் சர்வதேச கலைஞர்களுக்கு தங்குமிடங்களை வழங்கும். புதிய படைப்புகளை உருவாக்க அனுமதிக்கும். இந்த கூட்டணி கலாசார பன்மயம் மற்றும் புரிதலை ஊக்குவிக்க இலக்கிய விழாக்கள், உணவு விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு விழாக்களை நடத்த ஆதரவு அளிக்கும்.
இந்த கூட்டணி உள்ளூர் ஆரோவில் கலைஞர்களை உலகளாவிய அங்கீகாரம் பெறவும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் ஒரு தளத்தை வழங்கும். இரு தரப்பும் இணைந்து ஒரு கலாசார ரீதியாக வளமான மற்றும் இணைக்கப்பட்ட உலகத்திற்கு பங்களிக்க முயற்சி எடுப்போம் என்றார்.