UPDATED : மார் 13, 2026 04:43 PM
ADDED : மார் 13, 2026 04:49 PM

ஒரு மாணவரின் கல்விக்கான அடித்தளம், அவர்கள் படிக்கும் கல்வி வாரியத்தைப் பொறுத்தே அமைகிறது. இந்தியக் கல்வி முறையில் பல்வேறு கல்வி வாரியங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொன்றும் தனித்துவமான பாடத்திட்டம், கற்பித்தல் முறை மற்றும் மதிப்பீட்டு முறைகளைக் கொண்டுள்ளன.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,)
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களுக்கு “முழுமையான மற்றும் துடிப்பான கல்வியை” வழங்குவதாகும்.
இது இந்தியாவின் தேசிய அளவில் மிகவும் பரவலாகப் பின்பற்றப்படும் கல்வி வாரியம். இது தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறது.
இத்தேர்வு முறையில், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இது மாணவர்களின் மனப்பாடத் திறனை விட புரிதல் திறனைச் சோதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சி.ஐ.எஸ்.சி.இ.,
இந்த வாரியம் மாணவர்களுக்கு உயர்தரமான கல்வியை வழங்குவதன் மூலம், அவர்களை ஒரு “மனிதநேயம் மற்றும் பன்மைத்துவம் கொண்ட சமூகத்திற்கு” பங்களிக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சி.பி.எஸ்.இ.,யை விட ஆழமான மற்றும் விரிவான பாடத்திட்டத்தைக் கொண்டது. அனைத்துப் பாடங்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இத்தேர்வு முறையில், உள்மதிப்பீடு மற்றும் ஆய்வகச் செயல்பாடுகளுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு மாநில வாரியம்
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய நோக்கம் “சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வி”.
மாநில அரசுப் பணிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேர்வதற்கு இந்த வாரியத்தின் பாடத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
இது மாநிலத்தின் வரலாறு, மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதோடு, விளிம்புநிலை மாணவர்களுக்கும், சமச்சீர் கல்வி மூலம் தரமான கல்வியையும் சமமான வாய்ப்பையும் வழங்குகிறது.
ஒவ்வொரு கல்வி வாரியத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஏற்ப கல்வி வாரியங்களை தேர்வு செய்யலாம்.

