வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்: அறிவித்தது இஸ்ரோ
வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்: அறிவித்தது இஸ்ரோ
UPDATED : டிச 18, 2024 12:00 AM
ADDED : டிச 18, 2024 05:38 PM

பெங்களூரு:
வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் அடுத்த கட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது. வீரர்கள் இன்றி, விண்கலனை மட்டும் விண்வெளிக்கு அனுப்புவதற்கான சோதனைக்கலன் தயார் செய்யும் பணி இன்று ஸ்ரீஹரிக்கோட்டாவில் தொடங்கியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இஸ்ரோ வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. வீரர்களை அனுப்புவதற்கு முன்னேற்பாடாக, பல்வேறு கட்டங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. வீரர்கள் பயணிக்கும் கலனை தனியாக விண்வெளிக்கு அனுப்பி, பத்திரமாக கடலில் தரை இறக்குவது, மீட்பு ஒத்திகை போன்ற பணிகளை இஸ்ரோ செய்து வருகிறது.
அதன் அடுத்த கட்டமாக, வீரர்கள் இல்லாமல், சோதனை அடிப்படையில் வெறும் விண்கலனை மட்டும் விண்வெளிக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கான முழுமையான விண்கலனை அசெம்பிளி செய்யும் பணி, இன்று ஸ்ரீஹரிக்கோட்டாவில் தொடங்கியுள்ளதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது. ககன்யான் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, இதற்கான பூர்வாங்க பணிகளை இஸ்ரோ தொடங்கியிருந்தது.
கடந்த 2014 டிச.,18ல் விண்கலன் ஒன்றை பூமியில் இருந்து 126 கிலோமீட்டர் உயரத்துக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் சோதனையை இஸ்ரோ செய்திருந்தது. அந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட அதே நாளில், இன்று அடுத்த கட்ட சோதனைக்கு தயாராகி இருப்பதாக இஸ்ரோ பெருமிதம் தெரிவித்துள்ளது.
சரியாக இன்று காலை 8:45 மணிக்கு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. வீரர்களுக்கான கலனை ஒருங்கிணைக்கும் பணி பெங்களூரு மையத்திலும், சர்வீஸ் மாட்யூல் எனப்படும் சேவை கலனை ஒருங்கிணைக்கும் பணி திருவனந்தபுரம் மையத்திலும் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.