UPDATED : மார் 16, 2026 04:37 PM
ADDED : மார் 16, 2026 04:39 PM

புதுச்சேரி:
புதுச்சேரி ஜிப்மரில் சர்வதேச பட்டப்படிப்பு 8வது மருத்துவ மாநாடு 'மனதின் தீப்பொறி' தலைப்பில் 3 நாட்கள் நடந்தது.
மாநாட்டிற்கு, ரிஷிகேஷ் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மீனு சிங் தலைமை தாங்கி, இளம் மருத்துவ மாணவர்கள் அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவும், ஆராய்ச்சியில் ஈடுபடவும், மருத்துவப் பணியிலும் நோயாளி பராமரிப்பிலும் சிறந்த நிலையை அடைய முயற்சிக்க வேண்டும்' என்றார்.
ஜிப்மர் இயக்குநர் வீர்சிங் நேகி வாழ்த்தி பேசினார். மாநாட்டில் இந்திய மருத்துவ துறையின் முக்கிய நிபுணர்கள் சிறப்பு சொற்பொழிவு வழங்கினர். பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளை பெற்ற டாக்டர் ஜோஸ் சாக்கோ, அவசர மருத்துவத்தின் முன்னோடி டாக்டர் சுரேஷ் டேவிட், குழந்தை நல டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.
மாநாட்டில் அழகியல் அறுவை சிகிச்சை, இயந்திர உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சை மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை போன்ற புதிய பட்டறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், நாடு முழுதும் உள்ள 200 மருத்துவக் கல்லுாரிகளை சேர்ந்த 4,500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

