ஆடிட்டர் படிப்புக்கு வறுமை தடையாக இருக்காது: ஐ.சி.ஏ.ஐ. தலைவர் பேச்சு
ஆடிட்டர் படிப்புக்கு வறுமை தடையாக இருக்காது: ஐ.சி.ஏ.ஐ. தலைவர் பேச்சு
UPDATED : ஜன 28, 2013 12:00 AM
ADDED : ஜன 28, 2013 07:27 AM
இந்திய பட்டய கணக்கர்கள் சங்க திருப்பூர் கிளை அலுவலகம், பெத்திசெட்டிபுரத்தில் இயங்கி வருகிறது. இங்குள்ள பயிற்சி மையத்தில், 250 மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இங்கு, தேசிய பட்டய கணக்கர்கள் சங்கம் சார்பில், 2.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
கட்டட திறப்பு விழாவில், தேசிய தலைவர் ஜெயதீப் நரேந்திர ஷா பேசியதாவது: மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, பட்டய கணக்கர்கள் சங்கம், தனது கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அதிக மாணவர்கள் ஆடிட்டர் பயிற்சி பெற வசதியாக, தேவையான அளவுக்கு, அடித்தளம் அமைக்கப்படுகிறது.
சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் படிப்புக்கு அதிக பணம் தேவையில்லை; கடின உழைப்பும், தொடர் முயற்சியும் இருந்தாலே போதும். ஆடிட்டர் பயிற்சி பெற வறுமை எப்போதும் தடையாக இருப்பதில்லை. தமிழகத்தை சேர்ந்த, ஆட்டோ டிரைவர் மகள் பிரேமா, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார். இவ்வாறு, அவர் பேசினார்.
தெற்கு பிராந்திய தலைவர் விஸ்வநாத் பேசுகையில், "தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கியது தெற்கு பிராந்தியம். இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள பொருளாதாரத்துக்கு, ஆடிட்டர் பணி மிகவும் முக்கியமானது. தெற்கு பிராந்தியத்தில் உள்ள, 36 கிளைகளின் மூலமாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைகின்றனர்" என்றார்.
