சி.ஏ., படிப்பில் முதலிடம்: பிரேமாவிற்கு முதலமைச்சர் பாராட்டு
சி.ஏ., படிப்பில் முதலிடம்: பிரேமாவிற்கு முதலமைச்சர் பாராட்டு
UPDATED : பிப் 05, 2013 12:00 AM
ADDED : பிப் 05, 2013 07:33 AM
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கடந்த, 20 ஆண்டுகளாக மும்பையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகள் பிரேமா. சமீபத்தில் நடந்த, சி.ஏ., தேர்வில், அகில இந்திய அளவில், முதலிடத்தை பெற்றார்.
பிரேமாவை பாராட்டும் வகையில், அவருக்கு, 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். நேற்று, சென்னை தலைமைச் செயலகம் வந்த பிரேமாவிற்கு, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் வழங்கினார்.
ஊக்கத்தொகையை பெற்ற பிரேமா கூறியதாவது: எனக்கு, 10 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை கொடுத்த முதல்வருக்கு நன்றி. இதை நான் பணமாக நினைக்கவில்லை; பரிசாகவும், பொக்கிஷமாகவும் நினைக்கிறேன். முதல்வர், என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாக கூறியுள்ளார்.
எனக்கு தற்போது, பல நிறுவனங்களில் இருந்து பணியாற்ற அழைப்பு வந்துள்ளது. இன்னும் நேர்காணலுக்கு செல்லவில்லை; எந்த நிறுவனத்தில் சேருவது என்பதை பின்னர் முடிவு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். பிரேமாவுடன், அவரது தந்தை ஜெயக்குமார் மற்றும் சகோதரர் வந்திருந்தனர்.
