தேர்வு மையத்தில் பாம்புகள்: மருத்துவ மாணவர்கள் ஓட்டம்
தேர்வு மையத்தில் பாம்புகள்: மருத்துவ மாணவர்கள் ஓட்டம்
UPDATED : பிப் 09, 2013 12:00 AM
ADDED : பிப் 09, 2013 06:20 AM
வேலூர்: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி தேர்வு மையத்தில், திடீரென பாம்புகள் படை எடுத்ததால், வினாத்தாள்களை போட்டு விட்டு, மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
வேலூர் அடுத்த அடுக்கும்பாறையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு, இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது. நேற்று காலை, 10:00 மணிக்கு தேர்வு நடந்தது. அ
ப்போது, அந்த மையத்தின் உள்ளே திடீரென, 10 நல்ல பாம்புகள் ஒன்றின் பின் ஒன்றாக நுழைந்தன. இதைப் பார்த்து பீதியடைந்த மாணவர்கள், வினாத்தாள்களை தூக்கிப் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். சில மாணவர்கள் மட்டும் தைரியமாக பாம்புகளை விரட்ட முயன்றனர்.
அப்போது, நான்கு பாம்புகள் படம் எடுத்து ஆடின. இதை பார்த்த, விரட்ட முயன்ற மாணவர்களும், தேர்வு கண்காணிப்பாளரும் வெளியில் ஓடினர். சிறிது நேரத்தில் மையமே காலியானது; தகவல் அறிந்து, பாம்பு பிடிப்பவர்கள் வந்தனர்; ஒரு மணி நேரம் போராடி, 10 பாம்புகளையும் பிடித்து சென்றனர்.
அதன் பின் மதியம், 12:30 மணிக்கு தேர்வு நடந்தது. பாம்புகள் பிடிபட்ட போதும், பல மாணவர்கள் பீதியுடன் தேர்வு எழுதி முடித்தனர். தேர்வு முடியும் வரை, பாம்பு பிடிப்பவர்கள் அங்கேயே இருந்தனர்.
மூன்று நாட்களுக்கு முன், இதே போல, தேர்வு நடந்த போது ஒரு பாம்பு மட்டும் வந்தது. நேற்று, 10 பாம்புகள் வந்ததால், பீதியும், பரபரப்பு ஏற்பட்டது. "தேர்வு மையத்துக்கு பக்கத்தில் உள்ள முட்புதரில் இருந்து பாம்புகள் வந்ததாகவும், முட்புதரை அகற்றும்படி, பல முறை கோரிக்கை விடுத்தும், மருத்துவமனை நிர்வாகம் அகற்றவில்லை" என, மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
