பொறியியல் கலந்தாய்வு முடிந்தது: 77,000 இடங்கள் காலி
பொறியியல் கலந்தாய்வு முடிந்தது: 77,000 இடங்கள் காலி
UPDATED : ஜூலை 27, 2013 12:00 AM
ADDED : ஜூலை 27, 2013 08:44 AM
இதனால், 100க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள், போதிய அளவு மாணவர்கள் இல்லாமல், தவிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. பொறியியல் கல்லூரிகளில் ஆக., 1ம் தேதி வகுப்புகள் துவங்குகின்றன.
உயர்கல்வி என்றாலே, பொறியியல், மருத்துவம் ஆகிய, இரண்டு படிப்புகள் தான், மாணவர் மனதிலும், பெற்றோர் மனதிலும், பெரும்பாலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. ஏராளமான துறைகள், விதம் விதமாக, வேலை வாய்ப்புகளை கொட்டிக் கொடுக்கும் வகையில், பல்வேறு படிப்புகள் இருக்கிற போதும், மருத்துவம், பொறியியல் ஆகிய இரு படிப்புகள் மீதே, மாணவர்கள் முட்டி, மோதுகின்ற நிலை அதிகரித்ததன் காரணமாக, பொறியியல் கல்வியின் நிலைமை, பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு, பி.இ., படிப்பின் மீது இருந்த நாட்டத்தை அறிந்ததும், புற்றீசல் போல், பொறியியல் கல்லூரிகளை ஆரம்பித்தனர். 2009ல், 440 ஆக இருந்த கல்லூரிகளின் எண்ணிக்கை, தற்போது, 538ஐ தொட்டுள்ளது.
போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாமலும், தகுதியான ஆசிரியர்கள் இல்லாமலும், "கல்லா" கட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிகள், இன்று மண்ணை கவ்வியுள்ளன.
கடந்த மாதம், 21ம் தேதியில் இருந்து, நேற்றுடன், 36 நாட்கள், பி.இ., பொது சேர்க்கை கலந்தாய்வு, அண்ணா பல்கலையில் நடந்தது. கல்லூரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு, ஏற்கனவே இயங்கி வரும் கல்லூரிகளில், பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் துவக்கியதால் ஏற்பட்ட கூடுதல் இடங்கள் என, அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 2 லட்சத்தை தாண்டின.
இதற்கேற்ப, காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என, கலந்தாய்வு துவங்கும்போதே எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, 77 ஆயிரம் இடங்கள், மாணவர்கள் இல்லாமல் காத்தாடுகின்றன. கலந்தாய்வு மூலம், தற்போதுள்ள, 538 கல்லூரிகளில், 1.2 லட்சம் இடங்கள் நிரம்பியுள்ளன.
இவற்றில், 100க்கும் அதிகமான தனியார் கல்லூரிகளில், மிகக் குறைவான மாணவர்கள் சேர்ந்திருப்பதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. அதிலும், 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளை, மாணவர்கள், சீண்டவே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
மாநிலத்தில், 538 கல்லூரிகள் இருந்தாலும், முன்னணி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே, படிப்பை முடித்ததும், வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. "கட்-ஆப்" அதிகம் எடுத்த மாணவர்கள், முன்னணி கல்லூரிகளில் சேர்ந்து விடுகின்றனர்.
சராசரி மாணவர்களுக்கு, பொறியியல் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்தாலும், போதிய புரிதல் இல்லாமலும், படைப்புத்திறன் மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன் இல்லாததாலும், படிப்பை முடிக்க முடியாமல்அல்லாடுகின்றனர்.
அப்படியே, சராசரி மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றாலும், இவர்களுக்கு வேலை கொடுக்க, எந்த நிறுவனங்களும் தயாரில்லை. இருக்கின்ற அனைத்து கல்லூரிகளிலும், முழுமையான உள்கட்டமைப்பு வசதி மற்றும் தகுதியான ஆசிரியர்கள் பணிபுரிவது உறுதி செய்யப்பட்டால், பொறியியல் கல்வி, வரும் ஆண்டுகளில் மேம்படும்.
கலந்தாய்வு முடிந்ததும், அண்ணா பல்கலை வெளியிட்ட அறிவிப்புகள்:
* 36 நாட்களில், 1,78,664 பேர் அழைக்கப்பட்டதில், 1,20,311 மாணவர்களுக்கு, சேர்க்கை உத்தரவுகள் வழங்கப்பட்டன.
* 57,868 மாணவர்கள், "ஆப்சென்ட்"
* கலந்தாய்விற்கு வந்தும், 485 மாணவர்கள், "சீட்" எடுக்காமல், திரும்பிச் சென்றனர்.
* மாணவர், "ஆப்சென்ட்" சதவீதம், ஒவ்வொரு நாளும், சராசரியாக, 20ஐ தாண்டின. இதன் காரணமாக, ஒட்டு மொத்தத்தில், "ஆப்சென்ட்" சதவீதம், 32.39 ஆக உயர்ந்தது.
* கலந்தாய்வு துவங்கிய போது, இ.சி.இ., இடங்கள், மளமளவென நிரம்பின. ஆனால், 15வது நாளில் இருந்து, எம்.இ., பாடப்பிரிவில், மாணவர்கள் அதிகம் சேரத் துவங்கினர். இதன் காரணமாக, அதிகபட்சமாக, எம்.இ., பாடப்பிரிவில், 31,184 பேர் சேர்ந்தனர்.
* இரண்டாம் இடத்தில், இ.சி.இ., உள்ளது. இதில், 24,291 பேரும், மூன்றாவது இடத்தில் உள்ள சிவில் பாடத்தில், 18,095 பேரும் சேர்ந்தனர். இவ்வாறு அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.
