UPDATED : ஜூலை 28, 2013 12:00 AM
ADDED : ஜூலை 28, 2013 08:49 AM
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவசமாக மதிய உணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம், 53 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
சத்துணவு திட்டத்துக்குத் தேவையான, அரிசி, பருப்பு வகைகள், பாமாயில் உள்ளிட்ட உணவு பொருட்களை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வினியோகம் செய்கிறது. இதில், அரிசி இலவசமாகவும், மற்ற பொருட்கள் மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.
நுகர்பொருள் வாணிப கழகம் நியமித்துள்ள, தனி போக்குவரத்து ஒப்பந்ததாரர் மூலம், சேமிப்பு கிடங்குகளில் இருந்து, மாதந்தோறும் பள்ளிகளுக்கு, உணவு பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
சில தினங்களுக்கு முன், பீகார் மாநிலம், சரன் மாவட்டத்தில், விஷம் கலந்த மதிய உணவை சாப்பிட்ட, 23 குழந்தைகள் பலியாயினர். இந்த சம்பவம் நாடு தழுவிய அளவில், மிகப் பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, "பள்ளிகளில் வழங்கப்படும் உணவை, தலைமை ஆசிரியர் சாப்பிட்ட பின் தான் மாணவர்களுக்கு, வழங்க வேண்டும்"என தமிழக அரசு உத்தரவிட்டது. இது போன்ற காரணங்களால், சத்துணவு திட்டத்துக்கு வழங்கப்படும் உணவு பொருட்களை, பல கட்ட சோதனைக்கு பின்னரே, பள்ளிகளுக்கு வினியோகம் செய்ய உணவு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "கலெக்டர் மூலம் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையில், சத்துணவு திட்டத்துக்கு தேவையான அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. சேமிப்பு கிடங்கில் இருந்து, அரிசி, பருப்பு வகைகள் உள்ளிட்டவை, தீவிர சோதனைக்கு பின்னரே, சத்துணவு திட்டத்துக்கு வழங்கப்படும்" என்றார்.
நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து, மாதம் ஒன்றுக்கு, அரிசி, 14 ஆயிரம் டன், துவரம் பருப்பு, 2,200 டன், பாசி பயறு மற்றும் கறுப்பு கொண்டை கடலை தலா, 287 டன், பாமாயில், 171 டன் வினியோகம் செய்யப்படுகிறது.
பள்ளிகளில், செவ்வாய் கிழமை தோறும், வேகவைத்த பாசி பயறு அல்லது கறுப்பு கொண்டை கடலை, ஒரு குழந்தைக்கு, 20 கிராம் என்ற வீதத்தில் வழங்கப்படுகிறது.
