காடுகள் பரப்பளவு குறைந்து விட்டது: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வருத்தம்
காடுகள் பரப்பளவு குறைந்து விட்டது: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வருத்தம்
UPDATED : ஜூலை 28, 2013 12:00 AM
ADDED : ஜூலை 28, 2013 10:56 AM
கரூர்: "தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு படிப்படியாக குறைந்து வருவதால், பருவ மழை தவறி வருகிறது," என, பள்ளி விழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.
கரூர் பி.ஏ., வித்யாபவன் மேல்நிலைப்பள்ளியில், 13வது ஆண்டு அனைத்து மன்ற துவக்க விழா நடந்தது. விழாவில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது:
"இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காஃபி மற்றும் டீ ஆகியவற்றை பயிரிட காடுகள் அழிக்கப்பட்டது. இந்தியாவில் வளர்ந்திருந்த தரம் நிறைந்த மரங்களை எல்லாம், ஆங்கிலேயர்கள் வெட்டி எடுத்துச் சென்று விட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலை, கடல் மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரத்தில் இருந்தது. அதிலிருந்து 300, 400 அடி உயரத்தில் மரங்கள் இருந்தது. தற்போது அந்த மரங்கள் எல்லாம் காணவில்லை. கடந்த 1900ம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 350 நாட்களுக்கு மேல் மழை பெய்தது. 1950ம் ஆண்டுகளில் 200 நாட்கள் மழை பெய்தது. தற்போது ஆண்டுக்கு 50 நாட்களில் மழை பெய்வது இல்லை. இதற்கு காரணம் மரங்களை வெட்டியதுதான்.
கடந்த 1950வது ஆண்டுகளில் 33 சதவீதமாக இருந்த காடுகளின் பரப்பளவு தற்போது படிப்படியாக குறைந்து எட்டு சதவீதமாக உள்ளது. இதனால், பருவமழை தவறி விட்டது. பருவமழையை நம்பி, விவசாயிகள் சாகுபடி பணிகளை துவக்கினர். ஆனால், பருவமழை தவறி விட்டதால், விவசாயிகளால், சாகுபடி பணிகளை கணிக்க முடியவில்லை. புயல் மழையை நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது." இவ்வாறு அவர் பேசினார்.
