முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம்: சத்துணவு மையங்களுக்கு உத்தரவு
முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம்: சத்துணவு மையங்களுக்கு உத்தரவு
UPDATED : ஜூலை 28, 2013 12:00 AM
ADDED : ஜூலை 28, 2013 11:04 AM
ஊட்டி: முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்க வேண்டும் என நீலகிரி கலெக்டர் உத்தரவிட்டார்.
ஊட்டி அண்ணா கலையரங்கில் எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தின் கீழ் நடந்த ஒரு நாள் பயிற்சியில் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் பேசியதாவது:
"சத்துணவு வழங்கும் பணியாளர்கள் சத்துணவு மையங்கள், சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்து வேண்டும். மதிய உணவு வழங்குவதற்கு முன்பு சமையல் பாத்திரங்கள் சுத்தமாக பராமரித்திருக்க வேண்டும். தரமான காய்கறிகள் கீரை வகைகளை பயன்படுத்தி உணவை தரமான முறையில் தயாரிக்க வேண்டும்.
மதிய உணவை குழந்தைகளுக்கு வழங்குவதற்கு முன்பு பள்ளி தலைமையாசிரியர் உண்ட அரைமணி நேரத்திற்கு பிறகே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்கி பின்பே பள்ளியை விட்டு செல்ல வேண்டும்.
குழந்தைகளுக்கு எக்காரணத்தை கொண்டு பாதி முட்டை வழங்க கூடாது. முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப் பழம் வழங்க வேண்டும். நன்கு காய்ச்சிய குடிநீர் வழங்க வேண்டும். இம்முறைப்படி அனைத்து பணியாளர்களும் குழந்தைகளுக்கு தவறாமல் வழங்க வேண்டும்." இவ்வாறு கலெக்டர் பேசினார்.
