நீச்சல் உடை கொண்டு வராததற்காக மாணவிகளுக்கு பிரம்படி
நீச்சல் உடை கொண்டு வராததற்காக மாணவிகளுக்கு பிரம்படி
UPDATED : ஜூலை 30, 2013 12:00 AM
ADDED : ஜூலை 30, 2013 08:37 AM
கோவை நகரில், மாநகராட்சிப்பகுதியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதியில், பிரபல தனியார் பள்ளி ஒன்று உள்ளது. சி.பி.எஸ்.இ., கல்வி முறைப்படி, பாடம் கற்பிக்கும் இந்தப் பள்ளியில்தான் கோவையிலுள்ள பெரும்பாலான வி.ஐ.பி.,க்களின் குழந்தைகள் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, பள்ளி வளாகத்திலுள்ள நீச்சல் குளத்திலேயே வாரமிரு நாட்கள் நீச்சல் கற்றுத்தரப்படுகிறது. இதற்கான நீச்சல் உடையை, இதற்கான பயிற்சி வகுப்பு இருக்கும் நாட்களில் மாணவ, மாணவியர் கொண்டு வர வேண்டியது அவசியம்.
பத்தாம் வகுப்பு மாணவியருக்கான நீச்சல் பயிற்சி வகுப்பு நேற்று நடந்துள்ளது. உடை மாற்றுவதற்காக அவர்கள் வந்தபோது, 10க்கும் மேற்பட்ட மாணவியர், நீச்சல் உடை எடுத்து வராதது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, பள்ளி தாளாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த பெண் தாளாளர், நீச்சல் குளத்தில் குப்பைகளை அகற்றுவதற்காக வைத்திருந்த குச்சியில், நீச்சல் உடை கொண்டு வராத மாணவியரை வரிசையாக நிற்க வைத்து, அவர்களின் கால்களில் அடித்துள்ளார்.
அது மட்டுமின்றி, மாணவிகள் மனது புண்படும்படி, ஆண் நீச்சல் பயிற்சியாளருக்கு முன்நிலையில், பெண் தாளாளர் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த வார்த்தைகளால் மாணவியர் அனைவரும் கூனிக்குறுகியுள்ளனர்.
இந்த தகவல், சிறிது நேரத்தில் பள்ளி முழுவதும் பரவியது. மாலையில் பள்ளி முடிந்தபின், மாணவ, மாணவியரின் பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளி என்பதால், இதுபற்றி யாராவது கேள்வி எழுப்பினால், அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமென்று கருதி, போலீசிலோ, சி.பி.எஸ்.இ., அதிகாரிகளிடமோ புகார் செய்வதற்கு பெற்றோர் அஞ்சுகின்றனர். இந்த விஷயத்தை, எவ்வாறு அதிகாரிகளிடம் எடுத்துச் செல்வது என்பது பற்றி, பெற்றோர் மத்தியில் ரகசிய ஆலோசனையும் நடந்து வருகிறது.
