ரத்துசெய்யப்பட்ட படிப்புகளால் மாணவர்களை இழக்கும் இக்னோ
ரத்துசெய்யப்பட்ட படிப்புகளால் மாணவர்களை இழக்கும் இக்னோ
UPDATED : ஆக 19, 2014 12:00 AM
ADDED : ஆக 19, 2014 02:52 PM
புதுடில்லி: இக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தான் வழங்கிவந்த பல படிப்புகளை ரத்துசெய்து, கல்விக் கட்டணத்தையும் அதிகரித்து விட்டதால், அங்கே சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறப்படுவதாவது: உயர்மட்ட கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில், குறிப்பிட்ட படிப்புகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டன. இதன் விளைவாக, மாணவர் சேர்க்கையில் சரிவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விரிவாக்க பணிகளை நிறைவுசெய்யும் செயல்பாட்டில், ஏற்கனவே, இப்பல்கலை தோல்வியை சந்தித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக, இப்பல்கலையில், சுமார் 300 படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 300 கம்யூனிட்டி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், 600க்கும் மேற்பட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில், பல்கலையின் செயல்பாடுகள் உயர்மட்ட கமிட்டியின் கண்காணிப்பில் உள்ளன. கடந்த 2012ம் ஆண்டு முடிவில், 1 லட்சத்து 42 ஆயிரத்து 321 மாணவர்கள் படித்துவந்த 253 கம்யூனிட்டி கல்லூரிகள் மூடப்பட்டன.
இப்போதைக்கு, 3.5 லட்சம் மாணவர்கள் (அவர்களில் 2 லட்சத்திற்கும் மேலானவர்கள் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள்), இக்னோவில் தாங்கள் நிறைவுசெய்த படிப்பிற்கான சான்றிதழ்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இவ்வாறு கூறப்படுகிறது.
