கணித ஆசிரியர் சீனிவாசனின் 5,600 புத்தகங்கள் கணித ஆய்வு மையத்திற்கு தானம்
கணித ஆசிரியர் சீனிவாசனின் 5,600 புத்தகங்கள் கணித ஆய்வு மையத்திற்கு தானம்
UPDATED : செப் 01, 2014 12:00 AM
ADDED : செப் 01, 2014 01:06 PM
நங்கநல்லுார்: கணித ஆசிரியர் சீனிவாசன் எழுதி, சேகரித்த 5,600 கணித ஆய்வு புத்தகங்களை, அவரது குடும்பத்தார், கணித ஆராய்ச்சி மையத்திற்கு தானமாக வழங்கினர்.
நங்கநல்லுாரைச் சேர்ந்தவர், கணித ஆசிரியர் பி.கே.சீனிவாசன். 2005ம் ஆண்டு மறைந்த அவர், கணிதம் குறித்து ஏழை மாணவர்களுக்கு கற்பித்தார். கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டவர். அவர் எழுதிய, சேகரித்த 5,600 கணித ஆய்வு புத்தகங்களை, பி.கே.சீனிவாசன் கணித கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை மூலம், அவரது குடும்பத்தார் பராமரித்தனர்.
அந்த 5,600 புத்தகங்களை, இந்திய கணித ஆசிரியர் கழகத்திற்கு தானமாக வழங்கும் நிகழ்ச்சி, நங்கநல்லுாரில், பி.கே.சீனிவாசன் வாழ்ந்த வீட்டில் நடைபெற்றது. சீனிவாசன் குடும்பத்தார் புத்தகங்களை வழங்க, இந்திய கணித ஆசிரியர் கழக செயலர் மகாதேவன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், பர்வீன் சுல்தானா, ரங்காச்சாரி, ரங்கன், கண்ணன் மற்றும் சீனிவாசனிடம் கல்வி கற்றோர் கலந்து கொண்டனர்.
