திருத்தங்கல் அரசு பள்ளியில் நடக்கும் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டப்படுமா?
திருத்தங்கல் அரசு பள்ளியில் நடக்கும் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டப்படுமா?
UPDATED : செப் 06, 2014 12:00 AM
ADDED : செப் 06, 2014 11:54 AM
சிவகாசி: திருத்தங்கல் அரசு பள்ளி காம்பவுண்ட் சுவரை துளையிட்டு ஊடுருவும் கும்பல், வகுப்பறையில் உள்ள ஆசிரியர்களை கல்வீசி தாக்கும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
திருத்தங்கல் அரசு மேல்நிலை பள்ளியில், 800 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் பல்வேறு தரப்பு மாணவர்கள் படித்தாலும், குறிப்பிட்ட இரு பிரிவை சேர்ந்த மாணவர்களிடையே, அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. சமீப காலமாக பள்ளியில் கெடுபிடி அதிகமாக இருப்பதால், சிலர் வெளியில் மோதி சண்டையிடும் சூழ்நிலை நிலவுகிறது. மாணவர்களின் சிறு சண்டை, ஜாதிமோதலாக உருவெடுக்கிறது. இதனால் நகரின் ஒட்டு மொத்த அமைதி அடிக்கடி சீர்கெடுகிறது.
அத்துமீறல்: பள்ளி காம்பவுண்ட் சுவரை துளையிட்டு, பள்ளி நேரத்திற்குள் ஊடுருவும் கும்பல், பிடிக்காத ஆசிரியர்களை, வகுப்பறைக்குள் கல்வீசி தாக்கி விட்டு தப்பிவிடுகிறது. சமீபத்தில் நடந்த கல்வீச்சில், ஒரு ஆசிரியர் காயமடைந்துள்ளார். சமூக விரோதிகள் காம்பவுண்ட் சுவரில் ஏறி ,பெண்கள் கழிப்பறைக்குள் எட்டி பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் பெண்கள் கழிப்பறைக்கு தனியாக செல்ல அஞ்சுகின்றனர்.
இரவில் வகுப்பறைக்குள் வந்து மது, போதை அருந்தி அசிங்கப்படுத்தி செல்கின்றனர். இரவு காவலர் பாதுகாப்பிற்கு இருந்தும் பயன் இல்லை. சில மாதங்களுக்கு முன், கழிப்பறைக்கு சென்ற ஆசிரியரை உள்ளே வைத்து பூட்டி விட்டு சென்றுவிட்டனர். பின்னர் ஆசிரியர் சத்தம் போட, மற்றவர்கள் உதவியால் வெளியில் வந்துள்ளார்.
காம்பவுண்ட் சுவர் துளையை அடைத்தால், மறுபுறம் புதிதாக துளை போட்டு பள்ளிக்குள் நுழைகின்றனர். பள்ளியில் படிக்கும் அப்பாவி மாணவர்கள், ஆசிரியர்களும் சமூகவிரோதிகளிடம் சிக்கி தவிக்கின்றனர். பள்ளியில் அத்துமீறும் சமூக விரோதிகள் மீது, போலீசார், நடவடிக்கையை கடுமையாக்க வேண்டும்.
