திட்டமிட்டபடி நடக்கிறது பாரதியார் பல்கலை ஆசிரியர்கள் நியமனம்
திட்டமிட்டபடி நடக்கிறது பாரதியார் பல்கலை ஆசிரியர்கள் நியமனம்
UPDATED : பிப் 19, 2015 12:00 AM
ADDED : பிப் 19, 2015 12:24 PM
பாரதியார் பல்கலையில், 12 ஆசிரியர்கள் நியமனத்துக்கான தடையை, தமிழக அரசு விலக்கியதால், திட்டமிட்டபடி நேர்காணல் நடக்கிறது.
பாரதியார் பல்கலை கட்டுப்பாட்டில் பல்வேறு கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. பல்கலையில், காலிப் பணியிடங்களை நிரப்ப, பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதன்படி, மனித மரபியல் மற்றும் கல்வியியல் துறைகளில், 12 புதிய ஆசிரியர்களை நியமிக்க அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. பின், விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானோருக்கு நேர்காணல் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, ஐகோர்ட்டில் இடைக்காலத் தடை உள்ளதால், ஆசிரியர் நியமனத்தை தடை செய்யக் கோரி, தமிழக உயர் கல்வி அமைச்சகத்தில் ஒரு தரப்பினர் மனு அளித்தனர். இதையடுத்து, இப்பிரச்னை குறித்து உடனடியாக விளக்கம் அளிக்க, பாரதியார் பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சைக்கு, உயர் கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா உத்தரவிட்டார்.
இதனால் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், அரசு செயலர் அபூர்வாவை சந்தித்து, உரிய ஆவணங்களுடன் விளக்கமளித்தனர். இதையடுத்து ஆசிரியர் நியமன நேர்காணலை நடத்துமாறு, அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர் கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஐகோர்ட் வழக்குக்கும், தற்போது நடக்கும் ஆசிரியர்கள் தேர்வுக்கும் தொடர்பில்லை. நியமனம் குறித்து வந்த மனுவின் மீது, உயர் கல்வித் துறையிலிருந்து, பல்கலை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. தற்போது மேற்கொள்ளப்படும் நியமனம் ஏற்கனவே தேங்கியிருந்த காலிப் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கை என்று பல்கலை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து நேர்காணலுக்கான தடையை அரசு நீக்கி விட்டது. திட்டமிட்டபடி நேர்காணல் மற்றும் நியமனப் பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
