பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இரவு நேர வகுப்பு
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இரவு நேர வகுப்பு
UPDATED : பிப் 27, 2015 12:00 AM
ADDED : பிப் 27, 2015 11:03 AM
திருப்பூர்: திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, இரவுநேர வகுப்பு துவங்கியது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 5ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு 19ம் தேதியும் பொதுத்தேர்வு துவங்க உள்ளது. திருப்பு தேர்வு முடிந்துள்ள நிலையில், தேர்வு நடவடிக்கைகளை கல்வித்துறை தீவிரப்படுத்தி உள்ளது. நூறு சதவீத தேர்ச்சி என்ற இலக்கை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் அடைய வேண்டும் என்ற கல்வித்துறை உத்தரவால், கல்வியாண்டின் துவக்கத்தில் இருந்தே, தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வதில் ஆசிரியர்கள் முனைப்பாக இருந்து வருகின்றனர்.
இதன் அடுத்த கட்டமாக, பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்காக இரவு நேர சிறப்பு வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில், 40க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை வகுப்பு நடத்தப்படுகிறது. தலைமை ஆசிரியர் போஜன் தலைமையில், 5 ஆசிரியர்களின் மேற்பார்வையில், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகின்றனர்.
அவர்களுக்கு தக்காளி சாதம், உப்புமா வழங்கப்படுகிறது. கே.எஸ்.சி., அரசு பள்ளியில், மாலை நேர சிறப்பு வகுப்பு மட்டுமே நடத்தப்படுகிறது; கொசுத்தொல்லை அதிகமாக உள்ளதால், இரவு நேர வகுப்பு நடத்துவதில், ஆண்டுதோறும் அப்பள்ளிக்கு சிக்கல் நீடிக்கிறது. மற்ற சில பள்ளிகளிலும், இரவு நேர சிறப்பு வகுப்பு, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
