விளையாட்டு உபகரணங்கள் விலை அதிகமாக இருப்பதால் அரசு பள்ளி மாணவர்கள் வேதனை
விளையாட்டு உபகரணங்கள் விலை அதிகமாக இருப்பதால் அரசு பள்ளி மாணவர்கள் வேதனை
UPDATED : பிப் 27, 2015 12:00 AM
ADDED : பிப் 27, 2015 12:09 PM
திருப்பூர்: டேக்வாண்டோ, ஜூடோ, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக் விளையாட்டுகளுக்கான உபகரணங்கள் விலை அதிகமாக இருப்பதால், ஆர்வம் இருந்தும் அவ்விளையாட்டுகளில் கால்பதிக்க முடியாமல், அரசு பள்ளி மாணவர்கள் வேதனை அடைகின்றனர்.
கபடி, கோ-கோ, வாலிபால், கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகளுக்கு, உடற்கல்வி ஆசிரியர்கள் வாயிலாக, அரசு பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. விளையாட்டு பாட வேளையில், மாணவர்கள் விளையாடுவதற்கும் வாய்ப்பு தரப்படுகிறது. 100 மீ., முதல் 1,500 மீ., தொடர் ஓட்டம் வரை, தனி நபராக பயிற்சி பெற்று, தன்னம்பிக்கை மூலமே, பல மாணவர்கள் வெற்றி பெறுகின்றனர்.
பள்ளி மைதானம், வீட்டின் அருகே உள்ள காலியிடம் போன்றவையே, இவர்களின் பயிற்சி களம். தவிர டேக்வாண்டோ, ஜூடோ, ஜிம்னாஸ்டிக் போட்டி நடத்தப்படுகிறது. இவற்றில் தனியார் பள்ளி மாணவர்களின் ஆதிக்கமே அதிகம் உள்ளது; விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் கூட அரசு பள்ளி மாணவர்கள் தலைகாட்டுவதில்லை.
கபடி, கோ-கோ உள்ளிட்டவை, உடல் ரீதியானவை; விதிமுறை தெரிந்திருந்தால் போதும், உபகரணம் தேவையில்லை. குறைந்த தொகையை செலவிட்டால் வாலிபால், கால்பந்து, சாட்-புட் போட்டிகளுக்கும் தயாராகலாம்.
ஜிம்னாஸ்டிக், ஜூடோ, வாள்சண்டை போன்றவற்றில் பங்கேற்க வேண்டும் எனில், முறையாக பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இதை கற்க, பாதுகாப்பு கவசம் அணிய வேண்டியுள்ளது. வாள் சண்டையின் போது தலைக்கவசம், உடலில் காயம் ஏற்படாமல் இருக்க, கவச உடை அவசியமாகிறது. ஜிம்னாஸ்டிக் பயிற்சி மேற்கொள்ள, வசதியுடன் கூடிய மைதானம், மெத்தை விரிப்பு அவசியம். அரசு பள்ளிகளில், மேற்கண்ட விளையாட்டுகளுக்கு உபகரணம் இல்லை.
பள்ளி கல்வித்துறையும், மாவட்ட விளையாட்டுத்துறையும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. மேற்கண்ட போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் இருந்தாலும், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அரசு பள்ளி மாணவர்கள், உபகரணங்கள் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இப்போட்டிகளில் ஜொலிக்க வேண்டும் என்ற அவர்களின் கனவு, நனவாகாமலேயே போய் விடுகிறது. இவ்விஷயத்தில், கல்வித்துறை கவனம் செலுத்த வேண்டும்.
உடற்கல்வி ஆசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, "உடற்கல்வி பயிற்சி மாணவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முந்தைய விதிமுறையை கொண்டு, இன்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது. புதிய விளையாட்டுகள் வந்தும், விதிகளில் மாறுதல் செய்யவில்லை. கல்வித்துறை மனது வைத்தால் மட்டுமே விளையாட்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, மாணவர்களை ஊக்கப்படுத்தலாம்" என்றார்.
