UPDATED : ஜன 05, 2016 12:00 AM
ADDED : ஜன 05, 2016 10:20 AM
அவர்கள் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை, அவர்களது தாய் மொழியில் எழுதி கொள்ளலாம் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு நெருங்கும் வேளையில் இதனால் மாணவர்கள் கலக்கமடைந்துள்ளனர். ஓசூர் கல்வி மாவட்டத்தில், ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், தெலுங்கு, கன்னடம், உருது என, 68 அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் மொத்தம், 6,873 மாணவ, மாணவியர், தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், உருது மொழியை, தாய்மொழியாக கொண்டு, எஸ்.எஸ்.எல்.சி., படித்து வருகின்றனர்.
கடந்த, 2006 ம் ஆண்டு ஜூன், 12 ம் தேதி, தமிழக அரசு கொண்டு வந்த தமிழ் கட்டாயமாக்கும் சட்டத்தால், 2006ம் ஆண்டு, ஒன்றாம் வகுப்பு சேர்ந்த மாணவ, மாணவியர், 50 மதிப்பெண், தமிழிலும், 50 மதிப்பெண் தெலுங்கிலும் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த நடைமுறை கடைபிடிக்கப்படாமல், தெலுங்கு, கன்னட, உருது மாணவர்களின் தாய் மொழிக்கு பதில், தமிழ் தாய் மொழியாக கற்பிக்கப்பட்டது. இதையடுத்து, தெலுங்கு அமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த நவம்பர் மாதம், 23ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், இரு வார காலத்திற்குள், பிறமொழி படிக்கும் மாணவ, மாணவியரின் கருத்துகளை, பள்ளி கல்வித்துறை பெற வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
அதன்படி,
ஓசூர் கல்வி மாவட்டத்தில், தமிழ் கட்டாயமாக்கும் சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள, 6, 873 மாணவ, மாணவியரிடம் இருந்து எழுத்து பூர்வமாக
கடிதம் பெறப்பட்டது. இது பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சபிதாவுக்கு அனுப்பி
வைக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை, உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக் காட்டி,
தமிழ் கட்டாயமாக்கும் சட்டம், 2006 ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், அப்போது எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கப்படவில்லை எனவும்
குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நெருங்கி விட்ட நிலையில், இப்போது, தமிழ் கட்டாயமாக்கும் சட்டத்தை எதிர்ப்பது நியாயம் இல்லை. சிறுபான்மை மாணவர்கள், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை அவர்களது, தாய் மொழியில் எழுதி கொள்ளலாம். ஆனால், தமிழ் மொழி தான் முதன்மை பாடமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. இந்த கடிதம் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது சிறுபான்மை இன மாணவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
