UPDATED : ஜன 19, 2016 12:00 AM
ADDED : ஜன 19, 2016 10:47 AM
பொள்ளாச்சி
: பொள்ளாச்சி திருவிழாவில், மாணவ, மாணவியர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை அசத்தினர்.
ஆன்மிகத்துடன் கூடிய சுற்றுலாத் தலமாக உள்ளது தென்னை நகரம் என அழைக்கப்படும் பொள்ளாச்சி. ஆனைமலை பகுதியில் காணப்படும் பசுமையான நெல் வயல்கள், ஆழியாறு அணை, குரங்கு அருவி, டாப்சிலிப் என சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கியுள்ள பெருமையும் பெற்றது.
பொள்ளாச்சி பகுதியில் அனைத்தும் இருந்தாலும், இதுவரை சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்படவில்லை. சுற்றுலா மையமாக பொள்ளாச்சியை அறிவிக்க வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது. பொள்ளாச்சியில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், பொள்ளாச்சி திருவிழா நிகழ்ச்சி, கடந்த 12ம் தேதி கோவை ரோடு சக்தி மில் மைதானத்தில் துவங்கியது.
முதல் நிகழ்வாக, கடந்த 16ம் தேதி வரை ராட்சத பலுான் வானில் பறக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை மற்றும் மாலையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இருந்தது. பலுான் நிகழ்ச்சி நிறைவடைந்ததையடுத்து, கலை நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் மாலை துவங்கப்பட்டன. முதற்கட்டமாக மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், சப்-கலெக்டர் காயத்ரி, தாசில்தார் ஜெயசித்ரா ஆகியோர் புதுப் பானையில் பொங்கல் வைத்தனர்.
நிகழ்ச்சியை பார்வையிட அழைப்பு: அதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் பேசுகையில், பொள்ளாச்சி சுற்றுலாத்தலமாக உள்ளது. சுற்றுலாத்தலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, பொள்ளாச்சியில், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், பொள்ளாச்சி திருவிழா நிகழ்ச்சி துவங்கப்பட்டு, வரும் 31ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பொதுமக்கள் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அளித்து பார்வையிட வர வேண்டும், என்றார். ஆச்சிப்பட்டி ஊராட்சி தலைவர் ரங்கநாதன் மற்றும் வருவாய்த்துறை, சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவியர் நடனம்
முதற்கட்டமாக நேற்று மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதில், மாணவி இருவர், கால்களில், சலங்கையுடன், சக்கரத்தையும் (ஸ்கேட்டிங்) கட்டிக்கொண்டு, நடனமாடி பார்வையாளர்களை அசத்தினர். இசைக்கு ஏற்ப, கால்களை அசைத்து ஆடி அனைவரது கவனத்தையும் கட்டிப்போட்டனர்.
இதனைத் தொடர்ந்து, யோகாவை பயின்ற மாணவர்கள், உடலை வளைத்து, அழகாக கலையை வெளிப்படுத்தி அசத்தி காண்பித்தனர்.
