UPDATED : ஜன 21, 2016 12:00 AM
ADDED : ஜன 21, 2016 10:17 AM
சென்னை, அண்ணா பல்கலைக்குட்பட்ட, 627 கல்லுாரிகளில் படித்து முடித்தவர்களுக்கான, 36வது பட்டமளிப்பு விழா, அண்ணா பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. கவர்னரும், பல்கலை வேந்தருமான ரோசய்யா தலைமையில் நடந்த விழாவில், இஸ்ரோ விஞ்ஞானியும், தமிழக அரசின், முதல், அப்துல் கலாம் விருது பெற்றவருமான வளர்மதி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.
அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் வரவேற்றார். இதில்,
1.91 லட்சம் பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இவர்களில், 1,288 பிஎச்.டி., முடித்தோர் மற்றும், 74 முதல் தர
மற்றும் தங்க பதக்கம் பெற்ற மாணவர்கள், நேரில் பட்டம்
பெற்றனர்.
இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி பேசியதாவது:
நானும், 30 ஆண்டுகளுக்கு முன், அண்ணா பல்கலையில் படித்த மாணவி என்பதால் பெருமைப்படுகிறேன். அறிவியலும், தொழில்நுட்பமும் இணைந்தால், மாணவர்களால் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வர முடியும். இங்கு பயின்ற கல்வியால், அறிவியல் உலகில், சமூகத்தை முன்னேற்றும் வகையில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
70 வயதில்
பிஎச்.டி.,
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் மேலாண் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற, 71 வயது நாராயணன், தரம் உயர்த்தப்பட்ட போக்குவரத்து முறை என்ற தலைப்பில், பிஎச்.டி., பட்டம் பெற்றுள்ளார். இவர், வண்டலுார், ராமானுஜம் இன்ஜி., கல்லுாரியில் எம்.பி.ஏ., துறை இயக்குனராக உள்ளார். மற்றொருவர், கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த, 70 வயதான சேவியர். இவர், கொச்சியில் உள்ள, டோக் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் கல்விப்பிரிவு இயக்குனராக உள்ளார். இவர், போக்குவரத்து துறையில் மொபைல் போன் சிக்னல் என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து பிஎச்.டி., பட்டம் பெற்றார்.
