UPDATED : ஜூன் 14, 2023 12:00 AM
ADDED : ஜூன் 14, 2023 04:31 AM
நடப்பு கல்வி ஆண்டில், எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, இந்த ஆண்டு, மே 7ல் நடந்தது. தமிழகத்தில், 1.44 லட்சம் பேர் உட்பட, 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியாகின. இதில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர், 720க்கு, 720 மதிப்பெண் பெற்று, நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளார். அவரை போலவே, ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் போரா வருண் என்பவரும், 720 மதிப்பெண் பெற்று, முதலிடம் பெற்றுள்ளார். மேலும், தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதிய கவ்சடவ் பவுரி என்பவர், 716 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடமும், சூர்ய சித்தார்த் என்பவர், 715 மதிப்பெண் பெற்று, 6ம் இடமும், வருண் என்ற மாணவர், 715 மதிப்பெண்ணுடன், 7ம் இடமும் பெற்றுள்ளார். நாட்டில் முதலிடம் பெற்றுள்ள மாணவர் பிரபஞ்சன், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள மேல்மலையனுாரைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஜெகதீஷ், விழுப்புரம் மாவட்டம், மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றுகிறார். மாணவர் பிரபஞ்சன், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள, சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின், சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 படித்துள்ளார். சென்னை முகப்பேரில் உள்ள, வேல்ஸ் அகாடமியில் நீட் பயிற்சியும் பெற்றுள்ளார்.
