UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM
ADDED : ஜூன் 15, 2023 05:39 PM
தமிழகத்தில், காமராஜர் ஆட்சியின் போது 1965 ஜூலை 21ல் சேலம் ஹரிஜன நல இலாகா சார்பாக தர்மபுரி அடுத்த தடங்கத்தில் புதிய பள்ளி கட்டடத்தை அப்போதைய தமிழக உள்துறை அமைச்சர் கக்கன் திறந்து வைத்தார். இப்பள்ளியில், மாணவர் தேர்ச்சி சதவீதம் சில ஆண்டுகளாக தொடர்ந்து சரிந்தது. இந்நிலையில் பொன்விழா கண்ட இப்பள்ளியின் கூரை எட்டு மாதங்களுக்கு முன் விழுந்தது. இதனால் இப்பள்ளியின், 15க்கும் மேற்பட்ட மாணவர்கள், கக்கன்ஜீபுரத்திலுள்ள அங்கன்வாடி மையத்துக்கு தற்காலிகமாக அனுப்பி வைக்கப்பட்டனர். சேதமான பள்ளி கூரையை சீரமைக்க, அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இம்மையத்தில் தற்போது 30 குழந்தைகள் உள்ள நிலையில் அரசு துவக்கப்பள்ளி மாணவர்கள் அமர போதிய இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவர்கள் பள்ளியின் வெளியே அமர வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இப்பள்ளியின் நிலை குறித்து பெற்றோர் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். பள்ளி கட்டடத்தை சீரமைக்காத அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
