UPDATED : ஜூன் 20, 2023 12:00 AM
ADDED : ஜூன் 20, 2023 11:50 AM
நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசியதாவது:
முதலில் உங்களுடைய கட் ஆப் மதிப்பெண்ணை வைத்து அதற்குரிய படிப்பினை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் நினைத்த பிரிவு கிடைக்காத பட்சத்தில் அடுத்துள்ள பிரிவுக்கு உள்ள வாய்ப்பை விடாமல் பெற முயற்சிக்க வேண்டும். கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் உயரிய சம்பளத்தை வழங்குகிறது. அதுபோன்ற நிறுவனங்களில் நீங்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டுமெனில் அதற்குரிய அனைத்து தகுதிகளையும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.இன்ஜினியரிங் படிப்புக்கு அடிப்படை கணிதம் அறிவு அவசியம். மாணவர்கள் பொறுமையுடன் படிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இன்ஜினியரிங் என்பது மக்களுக்கு தேவையானவற்றை உருவாக்குவது. தேவையான தொழில்நுட்ப உபகரணங்களை, பொருட்களை வழங்குவது. அந்த புதியவற்றை, தேவையானவற்றை வழங்குபவராக நீங்கள் மாற வேண்டும். அதற்குத் தீவிரமாக படிக்கவும், யோசிக்கும் திறனும் உங்களுக்கு வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளான உத்வேகம் உங்களுக்கு இருக்க வேண்டும்.உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள், சர்வீஸ் நிறுவனங்கள் என 2 வகையாக நிறுவனங்கள் பொறியாளர்களை தேர்வு செய்கிறது. உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் உயர் சம்பளத்தை வழங்குகிறது. அதனைக் குறிக்கோளாக வைத்து நீங்கள் உங்கள் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்ள வேண்டும். அந்த நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வதற்கு அறிவுத்திறன் அவசியம். சாதாரண டிகிரி படித்த, ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஐடி கம்பெனிக்கு போக முடியும். ஆனால் என்ஜினியராக இருந்தால் மட்டுமே உற்பத்தி சார்ந்த பெரிய நிறுவனங்களில் பணியாற்ற முடியும்.இதற்கு நல்ல பாடத்தையும் அதற்கான கல்லுாரியையும் நன்றாக கூர்ந்து கவனித்து தேர்வு செய்தால் அவர்களே அதற்கான வழிகாட்டியாகவும் இருப்பார்கள். கடந்த 1984ம் ஆண்டு தொடங்கிய பல இன்ஜினியரிங் கல்லுாரிகள் இன்று இல்லை. ஆனால் கடந்த 2010ம் ஆண்டு தொடங்கிய கல்லூரிகள் இன்று நம்பர் ஒன்னாக உயர்ந்து, வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. அதனால் மாணவர்கள் தொழிற்சாலை சார்ந்த படிப்புகளை, திறனை வளர்க்கும் கல்லுாரிகளை பார்த்து தேர்வு செய்ய வேண்டும். எதிர்கால தேவையைக் கருத்தில் கொண்டு சொல்லிக் கொடுக்கும் கல்லுாரிகளாக இருக்க வேண்டும்.அந்த வகை நல்ல கல்லுாரியில் சேர்ந்தால்தான் முன்னேற்றம் பெற முடியும். தற்போது கம்ப்யூட்டர் சயின்சுக்கு போட்டி அதிகமாக உள்ளது. எதிர்காலம் எலக்ட்ரானிக்சின் ஆதிக்கமாக இருக்கும்.சிவில் இன்ஜினியரிங் படித்தால், அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. கல்லுாரிகளில் கேட் கோச்சிங் இருந்தால் நல்லது. உலகளவில் அதிக மனித சக்தியை வழங்கும் நாடாக நம் இந்தியா உள்ளது. நமது சராசரி வயது 28 ஆக உள்ளதால், நம்மை நோக்கி உலகம் வேலை வாய்ப்பு வழங்குகிறது. நல்ல வேலை கிடைக்க வேண்டும், ஜெயிக்க வேண்டும் என்பவன் நன்கு படிக்க வேண்டும். அதற்கான தொலைநோக்குப் பார்வை அவசியமாக இருக்க வேண்டும். பல படிப்புகளுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் அடிப்படையாக உள்ளது. அதன் சார்ந்த பிற படிப்புகளை பிறகு மேற்கொள்ள முடியும்.இவ்வாறு அஸ்வின் பேசினார்.
