UPDATED : செப் 12, 2023 12:00 AM
ADDED : செப் 12, 2023 04:15 PM
உடுமலை:
கைத்தறி மற்றும் துணிநுால் துறை மானிய கோரிக்கையில், இளைஞர்களுக்கு நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் அறிவிக்கப்பட்டது. 1.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில், இளைஞர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளித்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து, வேலைவாய்ப்பு வழங்கப்படும். விருப்பமுள்ளோர், தொழில் முனைவோராக உருவாக வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இப்பயிற்சி வாயிலாக, பாரம்பரிய கைத்தறி தொழில் புத்துயிர் பெறும்; கைத்தறி பொருட்களின் உற்பத்தி தரம் மேம்படும். பயிற்சியில் இணையும் விண்ணப்பதாரர்களுக்கு, நாளொன்றுக்கு, 250 ரூபாய் வீதம் பயிற்சி காலம் முடியும் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். கைத்தறிகளை இயக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும்; எழுத படிக்க தெரிந்திருப்பது அவசியம். நெசவு பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள், www.loomworld in என்கிற தளத்தில் விண்ணப்பிக்கலாம். திருப்பூர் அடுத்த கோவில்வழியில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில், விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.இந்த முகாமில் வேலையில்லாத ஆண், பெண்கள் பங்கேற்று, நெசவு பயிற்சிக்கான விண்ணப்பங்களை நேரடியாக பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
