அறிவாலயம் முன் போராட்டம்: ஆசிரியர் சங்கங்கள் முடிவு
அறிவாலயம் முன் போராட்டம்: ஆசிரியர் சங்கங்கள் முடிவு
UPDATED : அக் 10, 2023 12:00 AM
ADDED : அக் 10, 2023 08:28 AM
ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புகள், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்திய போது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளும் இடம் பெற்றன. இதனால், மகிழ்ச்சி அடைந்த ஆசிரியர் சங்கங்கள், தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டன. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுகளாகியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என, ஆசிரியர் சங்கத்தினர் போராட்டங்களை தீவிரப்படுத்திஉள்ளனர்.கடந்த இரண்டு ஆண்டுகளில், சென்னை டி.பி.ஐ., வளாகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன், 50க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடந்துள்ளன. கடந்த மாதம், 28ம் தேதி முதல், 9 நாட்களாக, டி.பி.ஐ., வளாகத்தில் நடந்த தொடர் போராட்டம், அரசுக்கும், பள்ளிக்கல்விக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதுடன், குண்டுக்கட்டாக வாகனங்களில் ஏற்றப்பட்டு, சென்னையை விட்டு போலீசாரால் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில், தி.மு.க., மீது ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதனால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், தங்களது சங்கங்களின் வழியே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.இனி வரும் காலங்களில், டி.பி.ஐ., வளாகத்தில் இல்லாமல், தி.மு.க., தேர்தல் அறிக்கை மற்றும் அதன் தேர்தல் கால செயல்பாடுகளை கண்டித்து, அண்ணா அறிவாலயம் முன் போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில், தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளனர். விரைவில், இதுகுறித்து சங்க கூட்டமைப்பு சார்பில் அறிவிப்பு வெளியாகும் என, ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
