UPDATED : அக் 12, 2023 12:00 AM
ADDED : அக் 12, 2023 09:13 AM
கடலுார்:
கடலுார் பீச் ரோடு எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2023-24ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி துவக்க விழா நடந்தது.கடலுார் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார் துவக்கி வைத்தார். பின், அவர் பேசுகையில், கூட்டுறவு துறையில் பணியில் சேருவதற்கு மட்டுமின்றி, மற்ற துறைகளிலும் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் பட்டயப் பயிற்சி கூடுதல் தகுதியாக உதவும். முழு முயற்சியுடன் புரிந்துகொண்டு படிக்க வேண்டும் என்றார்.எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையம் முதல்வர் (பொறுப்பு) நாகலட்சுமி வரவேற்றார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கடலுார் முதன்மை வருவாய் அலுவலர் எழில்பாரதி வாழ்த்துரை வழங்கினார். புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட புத்தகங்களை மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் வழங்க, பயிற்சியாளர்கள் பெற்றுக்கொண்டனர்.அப்போது, கூட்டுறவு மேலாண்மை நிலைய விரிவுரையாளர்கள் தனகோபால், திருநாவுக்கரசு, ஓய்வுபெற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சக்திவேல் நன்றி கூறினார்.
