அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர் நியமன செயல்பாடுகளுக்கு ஐகோர்ட் அனுமதி
அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர் நியமன செயல்பாடுகளுக்கு ஐகோர்ட் அனுமதி
UPDATED : அக் 15, 2023 12:00 AM
ADDED : அக் 15, 2023 10:31 AM
பெங்களூரு:
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு ஆசிரியர்கள் நியமனத்தைத் தொடர, மாநில அரசுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 6 முதல் 8ம் வகுப்புகளுக்கான ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை 2022 பிப்ரவரி 22 அன்று, மாநில கல்வித்துறை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களிடம் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, கடந்த ஆண்டு நவம்பர் 18 அன்று, தற்காலிக பட்டியல் வெளியிடப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு தந்தையின் ஜாதிச்சான்றிதழையும், வருமானச்சான்றிதழையும் இணைந்திருந்த சில விண்ணப்பதாரர்களின் மனுவை கல்வித்துறை நிராகரித்தது.
இதை எதிர்த்து, சிலர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தந்தையின் சான்றிதழ்கள் அடிப்படையிலேயே மனுதாரர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலித்து புதிய பட்டியல் வெளியிடும்படி கல்வித் துறைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, கடந்த மார்ச் 8ம் தேதி புதிய தேர்வுப் பட்டியலை கல்வித்துறை வெளியிட்டது. எனினும் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசும், சில கல்வி ஆர்வலர்களும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலே, நீதிபதி எம்.ஜி.எஸ்., கமல் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு வருமாறு:
அரசுப் பணியிடங்களில் ஆட்சேர்பு தொடர்பான பிரச்னையை கர்நாடகா மாநில நிர்வாக தீர்ப்பாயம் தான் தீர்வு கூற வேண்டும். தனி நபர் நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது. எனவே, அவரது உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
உடனடித்தேவை, மாணவர்களின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தற்போதைய பட்டியலில் உள்ள 13,352 பேரில் இருந்து தகுதியானவர்களை நியமனம் செய்ய அனுமதி அளிக்கிறோம். எனினும் இந்த நியமனம் தீர்ப்பாயத்தின் முடிவுக்குக் கட்டுப்பட்டதாக இருக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் மாநிலத்தில் உள்ள 35 கல்வி மாவட்டங்களில் உள்ள பட்டதாரி துவக்கப் பள்ளி ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை கல்வித்துறை தொடர முடியும்.
