UPDATED : அக் 17, 2023 12:00 AM
ADDED : அக் 17, 2023 10:00 AM
பல்லடம்:
பல்லடம் வனம் அமைப்பின் சார்பில் வனாலயம் வளாகத்தில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது.செயலாளர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் விஸ்வநாதன், இயக்குனர்கள் நடராஜன், ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா பேசுகையில், அப்துல் கலாம் என்றாலே, கனவு காணுங்கள் என்ற வார்த்தை தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். குறிக்கோளை அடைய உங்களால் எவ்வளவு கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டுமோ, அந்த அளவு உழைப்பை கொடுத்தால், மிக உயரமான இடத்தில் இருப்பீர்கள்.இந்த வயதில் உங்களுடைய கல்வி, தகுதி, திறமை ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தினால், வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம். அப்துல் கலாம் எதிர்பார்த்ததை விட நல்ல ஒரு நிலைக்கு நீங்கள் வரவேண்டும் என்றார்.முன்னதாக, அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அனைவரும், மவுன அஞ்சலி செலுத்தினர். பூமலுார் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். துணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.
