UPDATED : அக் 21, 2023 12:00 AM
ADDED : அக் 21, 2023 11:02 AM
பெங்களூரு:
அரசு உயர்நிலைபள்ளி மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சியளிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கராத்தே பயிற்சியாளர்களை நியமிக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவில் பாலியல் பலாத்காரம், தொல்லை என பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகரிக்கின்றன. குறிப்பாக, பள்ளி மாணவியர் இத்தகைய தொந்தரவுக்கு ஆளாகின்றனர். இதை கடுமையாக கருதிய கர்நாடக அரசு, உயர் நிலைப்பள்ளி மாணவியருக்கு, தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி அளிக்க திட்டமிட்டது. பயிற்சியாளர்களை நியமித்து, மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளித்தது. ஆனால் பயிற்சியாளர்கள் பற்றாக்குறையால், கராத்தே பயிற்சி திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கராத்தே பயிற்சியாளர்களை நியமிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலத்தின் 5,307 உயர்நிலை பள்ளிகளில், மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்படும். உடற் பயிற்சி, சங்கீதம், கைவினை பொருட்கள், ஓவிய பயிற்சி திட்டத்தின் கீழ், கராத்தே பயிற்சியும் அளிக்கப்படும். இதற்காக பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். பயிற்சியாளர்களுக்கு, 3,000 ரூபாய் கவுரவ நிதி வழங்கப்படும். கல்வி ஆர்வலர்கள், நன்கொடையாளர்களின் உதவி பெற்று, கராத்தே பயிற்சியாளர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
