கற்பித்தலில் நவீன யுக்திகளை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்
கற்பித்தலில் நவீன யுக்திகளை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்
UPDATED : அக் 21, 2023 12:00 AM
ADDED : அக் 21, 2023 12:23 PM
பள்ளி ஆசிரியர்களை போற்றும் வகையில் தினமலர் நாளிதழ் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் லட்சிய ஆசிரியர் விருதுகள் வழங்கப்படுகிறது. விருதுக்காக விண்ணப்பித்த நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களில் 30 பேர் தினமலர் லட்சிய ஆசிரியர் 2023 விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மதுரை தினமலர் அலுவலகத்தில் நடந்த விழாவில் சி.இ.ஓ., கா.கார்த்திகா விருது வழங்கி பேசியதாவது:
ஆசிரியர்கள் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்களே. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக்கொண்டு நவீன யுக்திகளை பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் ஆசிரியர் பணியை தொடர வேண்டும்.பிற மாநிலங்கள் உட்பட வெவ்வேறு இடங்களில் கல்வி எவ்வாறு கற்பிக்கப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்பட்டு மாணவர்களை மெருகேற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது.ஆசிரியப் பணியில் தேடுதல் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் தவறாமல் நாளிதழ் செய்திகளை படிக்க வேண்டும். மாணவர்களின் படைப்புக்களை நாளிதழ்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியையும் ஆசிரியர்கள் செய்ய வேண்டும்.தினமலர் லட்சிய ஆசிரியர் விருதுக்கு தேர்வு பெற்ற ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். மாநில, தேசிய நல்லாசிரியர் விருதுகளையும் பெற வேண்டும். குறிப்பாக தேசிய நல்லாசிரியர் விருது எவ்வாறு வழங்கப்படுகிறது. அதற்கு மதிப்பெண்கள் வழங்கும் முறைகள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும். காலத்திற்கேற்ப உங்களை அப்டேட் செய்துகொள்ளும் வகையில் விருதுகளுக்கான தேர்வு முறைகள் இருக்கும். ஆன்லைன் படிப்புகளை தேடிப் படிக்க வேண்டும். சுடர்விளக்கு ஆயினும் துாண்டுகோல் நன்றே என்பதற்கு ஏற்ப தான் ஆசிரியர்களுக்கு அதிக பயிற்சிகளை அரசு வழங்குகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். அரசு எதிர்பார்ப்பது போல் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைக்க ஆசிரியர்கள் உழைக்க வேண்டும். மதுரையில் கடந்தாண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெற்ற சராசரி மதிப்பெண்கள்4 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்தாண்டு பொதுத் தேர்வு சராசரி மதிப்பெண்ணை ஆய்வு செய்ததில், 1200 ஆசிரியர்கள் 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்துள்ளனர். 75 சதவீதம் ஆசிரியர்கள் 100 சதவீதம் தேர்ச்சியும், 50 சதவீதத்திற்கும் மேலும் தேர்ச்சி கொடுத்துள்ளனர். இந்த அர்ப்பணிப்பு, ஆசிரியர்களால் மட்டுமே சாத்தியம்.கல்வித்துறையின் உயர்வுக்கு படி, திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர். 100 சதவீதம் சேர்க்கை, பிளஸ் 2 வரை அவர்களை தக்கவைப்பதுடன் உயர்கல்விக்கு 100 சதவீதம் அனுப்பி வைப்பதே இத்திட்டத்தின் நோக்கம். மதுரையில் இந்தாண்டு 98 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதற்கெல்லாம் அடிப்படை, ஆசிரியர்களே. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர். பெற்றோர் முதல் ஆசிரியர். ஆசிரியர்கள் பார்வை பட்டால்தான் மாணவர்களுக்கு வெளிச்சம் கிடைக்கும். அவ்வகையில் உங்கள் பணி அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக செய்தி ஆசிரியர் ஜி.வி.ரமேஷ் குமார் வரவேற்றார். பொதுமேலாளர் ஆர்.பாலமுருகன், சி.இ.ஓ.,வுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
