UPDATED : அக் 21, 2023 12:00 AM
ADDED : அக் 21, 2023 03:11 PM
ஸ்ரீஹரிகோட்டா:
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் TV- D1 ராக்கெட் மூலம், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று (அக்.,21) காலை 8 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வானிலை காரணமாக மாதிரி விண்கலம் மீண்டும் 2 மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் பாய்ந்த விண்கலம் சில நிமிடங்களில் கடலில் பாராசூட் மூலம் பத்திரமாக கலனை தரையிறக்கியது.ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி கடந்த 2007ல், 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டது. கடந்த 2014ல் இத்திட்டத்துக்கு ககன்யான் என, பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.நோக்கம் என்ன?
பூமியிலிருந்து, 400 கி.மீ., தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுப் பணிக்கு பின் பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் ககன்யான் திட்டத்தின் நோக்கம்.மாதிரி விண்கலம் தரையிலிருந்து 16.6 கி.மீ தூரம் வரை அனுப்பப்பட்டு வங்கக்கடலில் இறக்கப்படும். 20 நிமிடத்தில் மாதிரி விண்கலம் அனுப்பும் சோதனை நிறைவு பெறும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2025ல் செயல்படுத்த முடிவு
சில தினங்களுக்க முன், ககன்யான் திட்டம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் 2025ம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.மிகப்பெரிய மகிழ்ச்சி
இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது:
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் சோதனையோட்டம் வெற்றி பெற்றது. இது மிகப்பெரிய மகிழ்ச்சி. திட்டமிட்டபடி கடலில் மாதிரி விண்கலம் தரையிறங்கியது. வானிலை காரணமாக தாமதம் ஏற்பட்டது. கடலில் விழுந்த மாதிரி கலனை மீட்கும் பணியில் ஈடுபட உள்ளோம் இவ்வாறு சோம்நாத் கூறினார்.பிரதமர் பாராட்டு
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யானை நனவாக்குவதற்கு இந்த சோதனை நம்மை ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ளது. நமது விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டியுள்ளார்.
