டி.என்.பி.எஸ்.சி., தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்க கவர்னர் மறுப்பு
டி.என்.பி.எஸ்.சி., தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்க கவர்னர் மறுப்பு
UPDATED : அக் 24, 2023 12:00 AM
ADDED : அக் 24, 2023 09:03 PM
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை கவர்னர் ரவி நிராகரித்துள்ளார். வேறு நபரை பரிந்துரைக்கும்படியும் வலியுறுத்தி உள்ளார்.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தலைவராக இருந்த பாலச்சந்திரன், 2022 ஜூனில் ஓய்வு பெற்றார். அதன்பின், உறுப்பினராக உள்ள முனியநாதன், பொறுப்பு தலைவராக செயல்பட்டு வருகிறார்.நியமனம்
தமிழக டி.ஜி.பி.,யாக இருந்த சைலேந்திரபாபு, இந்தாண்டு ஜூனில் பணி ஓய்வு பெற்றார். டி.என்.பி.எஸ்.சி., தலைவராக அவரை நியமனம் செய்வதற்கான பரிந்துரையை, கவர்னர் ரவிக்கு தமிழக அரசு ஜூலை மாதம் அனுப்பியது.டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தேர்வில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டதா; தலைவர் தேர்வு எந்த முறையில் நடத்தப்பட்டது என, பல்வேறு விளக்கங்களை கேட்டு, பரிந்துரை கடிதத்தை கவர்னர் ரவி, ஆகஸ்டில் திருப்பி அனுப்பினார்.வயது வரம்பு இல்லை
இந்த கேள்விகளுக்கு, தமிழக அரசு வாயிலாக விரிவான விளக்கம் அளித்து, மீண்டும் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டும் என்ற அரசின் பரிந்துரையை ஏற்காமல், கவர்னர் ரவி நிராகரித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தேர்வு முறையில் வெளிப்படை தன்மை இல்லை. இந்த பதவியில், 62 வயது வரை உள்ளவர்களை மட்டுமே நியமிக்க முடியும்.சைலேந்திரபாபுவை நியமித்தாலும், ஆறு மாதங்கள் தான் பணியில் இருப்பார். எனவே, தகுதியான வேறு ஒருவரை தேர்வு செய்யும்படி, கவர்னர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினராக சிவகுமார் என்பவரை நியமிக்க, தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையையும், கவர்னர் நிராகரித்து உள்ளார். இந்த விவகாரத்தில், தமிழக அரசு மீண்டும் சைலேந்திரபாபுவை பரிந்துரைக்குமா அல்லது வேறு ஒரு நபரை பரிந்துரைக்குமா என்பது சில நாட்களில் தெரிவிந்து விடும்.சர்வாதிகார முடிவு
தமிழக அரசின் பரிந்துரையை கவர்னர் ரவி நிராகரித்துள்ளது, அதிகார எல்லையை மீறிய சர்வாதிகார முடிவு. தமிழக அரசு செய்யும் பரிந்துரைகளை எல்லாம் நிராகரிக்கும் கவர்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மத்திய பா.ஜ., அரசின் ஏஜன்டாக செயல்படுகிறார் எனம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ கூறியுள்ளார்.
