UPDATED : அக் 26, 2023 12:00 AM
ADDED : அக் 26, 2023 10:25 AM
சென்னை:
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், பழந்தமிழ் இலக்கியங்களின் செம்பதிப்பு நுால்கள் வெளியிடப்பட உள்ளன.தமிழகத்தில் நுால்களை, 19ம் நுாற்றாண்டு வரை, ஓலைச்சுவடிகளில் எழுதி வைக்கும் வழக்கம் இருந்தது. அச்சுக்கூடங்கள் வந்த பின், அவை நுால் வடிவம் பெற்றன. அந்த வகையில், கி.பி., 600க்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்த, 41 செவ்வியல் நுால்களின் ஓலைச்சுவடிகள், இதுவரை நுால்களாகி உள்ளன.கடந்த நுாற்றாண்டு வரை, ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதய்யர், அவ்வை சு.துரைசாமி பிள்ளை உள்ளிட்ட தமிழறிஞர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். அந்த பணியில் தற்போது, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சுவடியியல் புலம் ஈடுபட்டுள்ளது. அதாவது, பாட வேறுபாடுகளைக் களைந்து, செம்பதிப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.இதற்காக, ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், பதிப்புகள், உரையாசிரியர்களின் மேற்கோள்களின் தகவல்களுடன் ஒப்பிட்டு, மூலபாடத்தை உறுதி செய்யும் வகையில் நுாலாக்கும் பணி நடக்கிறது.அடுத்த இரண்டு மாதங்களுக்குள், ஐங்குறுநுாறு - முல்லை, ஏலாதி, திரிகடுகம், கைந்நிலை, முத்தொள்ளாயிரம், களவழி நாற்பது ஆகிய நுால்கள், உரையுடன் செம்பதிப்பாக வெளியிடப்பட உள்ளன.
