UPDATED : நவ 28, 2023 12:00 AM
ADDED : நவ 28, 2023 09:52 AM
சென்னை:
ஆவண எழுத்தர்களின் உரிமம் புதுப்பித்தல் பணிக்கு, ஆன்லைன் வசதியை பதிவுத்துறை அறிமுகம் செய்துஉள்ளது.தற்போதைய நிலவரப்படி, 5,141 பேர் உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களாக உள்ளனர். இவர்களின் உரிமம், ஐந்தாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும். மாவட்ட பதிவாளர்கள் வாயிலாக, புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில், பதிவுத் துறையில் பல்வேறு பணிகளுக்கான கட்டணங்கள், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன.அதனால், ஆவண எழுத்தர் உரிமம் புதுப்பித்தலில், ரொக்க பரிமாற்றம் இருப்பதை தடுக்க, பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, பத்திரப் பதிவுக்கான இணையதளத்தில், ஆவண எழுத்தர் உரிமம் புதுப்பித்தல் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இந்த வசதியை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும்படி, ஆவண எழுத்தர்களை மாவட்ட பதிவாளர்கள் மற்றும் சார் - பதிவாளர்கள் அறிவுறுத்த வேண்டும் என, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டு உள்ளார்.
