பெரியார் பல்கலையில் முறைகேடு விசாரிக்க பா.ம.க., வலியுறுத்தல்
பெரியார் பல்கலையில் முறைகேடு விசாரிக்க பா.ம.க., வலியுறுத்தல்
UPDATED : நவ 28, 2023 12:00 AM
ADDED : நவ 28, 2023 04:37 PM
சேலம்:
பெரியார் பல்கலையில் அறக்கட்டளை முறைகேடு தொடர்பாக, தமிழக அரசு முறையாக விசாரித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க., வலியுறுத்தியுள்ளது.பா.ம.க., மாநில மாணவர் சங்க செயலர் வக்கீல் விஜயராசா தலைமையில் நிர்வாகிகள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனு விபரம்:
பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் சதிஷ், திருச்சி பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் ராம்கணேஷ் ஆகிய நால்வரும் சேர்ந்து, பூட்டர் அறக்கட்டளை தொடங்கி உள்ளனர்.இதுதவிர, தங்கவேல் உள்ளிட்ட மூவர் சேர்ந்து, அப்டெக்கான் போரம் என்ற இன்னொரு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பல்கலை அனுமதி, தமிழக அரசின் அனுமதி பெறவில்லை. பெரியார் பல்கலை சார்பில், தொழில்நுட்பம், தொழில் முனைவு போன்ற படிப்புகளை பூட்டர் அறக்கட்டளை நடத்தும்.அதற்காக, பல்கலையின் கட்டமைப்புகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ளும். ஆனால் பல்கலையை விட, கட்டணத்தை பல மடங்கு வசூலித்து, அதில் சிறு தொகையை மட்டும் பல்கலைக்கு வழங்கிவிட்டு, லட்சக்கணக்கான பணத்தை அறக்கட்டளை எடுத்து கொள்ளும். அதை பல்கலைக்கழகத்தால் தடுக்கவும் முடியாது, கேள்வி எழுப்பவும் முடியாது.அதாவது பெரியார் பல்கலைக்கு கிடைக்க வேண்டிய வருவாய், அறக்கட்டளை எடுத்து கொள்ளும். கடந்த ஜனவரியில் பெரியார் பல்கலையில், 13 வகையான முறைகேடுகள் தொடர்பாக, உயர்நிலைக்குழு விசாரணை நடத்தியது. தற்போது வரை, அதன் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே, அறக்கட்டளை முறைகேடு தொடர்பாக, தமிழக அரசு முறையாக விசாரித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
