தேர்வு நேரத்தில் விளையாட்டு போட்டி தேர்வு: தயாராவதில் சிக்கல்
தேர்வு நேரத்தில் விளையாட்டு போட்டி தேர்வு: தயாராவதில் சிக்கல்
UPDATED : டிச 02, 2023 12:00 AM
ADDED : டிச 02, 2023 10:26 AM
சிவகங்கை:
தமிழக அளவில் பள்ளி மாணவர்களுக்கு டிச.,7 ல் அரையாண்டு தேர்வு துவங்கும் நிலையில், திருச்சியில் மாநில விளையாட்டு போட்டி நடத்துவதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகளுக்கென தனித்தனியே நடந்த போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அணி, மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டி திருச்சியில் (டிச.,2) இன்று முதல் டிச., 7 வரை நடைபெறும் என அறிவித்துள்ளனர்.அனைத்து உயர், மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கும் டிச., 7 முதல் அரையாண்டு தேர்வு துவங்குவதற்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு காலத்தில், பள்ளி மாணவர்களுக்கு மாநில விளையாட்டு போட்டிகளை நடத்துவது, பெற்றோர், ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மாநில விளையாட்டு போட்டிக்கு சென்றுவிட்டால், எப்படி அரையாண்டு தேர்வுக்கு தயாராக முடியும் என ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், அரையாண்டு தேர்வுக்கு பின் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.சீக்கிரம் முடியும் போட்டிகள்
மாவட்ட உடற்கல்வி இயக்குனர் ஒருவர் கூறியதாவது:திருச்சியில் இன்று (டிச.,2) போட்டிகள் தொடங்கி, டிச., 7 வரை நடப்பதாக அறிவித்துள்ளனர். அரையாண்டு தேர்வு இருப்பதால், பெரும்பாலும் டிச., 6 ம் தேதிக்குள் நடத்தி முடிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம், என்றார்.
