UPDATED : டிச 02, 2023 12:00 AM
ADDED : டிச 02, 2023 07:18 PM
விருதுநகர்:
விருதுநகரில் டிச. 8, 9ல் கரிசல் இலக்கியத்திருவிழா நடக்கிறது என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது:
மாவட்ட நிர்வாகம் சார்பில் கரிசல் இலக்கியத்திருவிழா டிச. 8, 9 ஆகிய 2 நாட்கள் விருதுநகரில் நடக்கிறது. திருநெல்வேலி, கயத்தார், கோவில்பட்டி, சிவகாசி, விருதுநகர், விளாத்திகுளம், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் வானம் பார்த்த பூமியாக கிடக்கும் கரிசல் நிலத்தைக் கதைக் களமாகவும் அங்கு வாழும் மனிதர்களைக் கதை மாந்தர்களாகவும் கொண்டு, அவர்களின் வாழ்வியல், வலிகளை, சந்தோஷத்தை வட்டார மொழிநடையில் கூறும் இலக்கியமே கரிசல் இலக்கியம்.கரிசல் இலக்கியப் படைப்புகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதும், புதிய படைப்பாளர்களை உருவாக்குவதும் இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம். இதில் கரிசல் இலக்கிய எழுத்தாளர்கள்,தமிழ் அறிஞர்கள் பேசுகின்றனர். கல்லுாரி மாணவர்கள் கலந்துரையாடுகின்றனர். கரிசல் மண்ணின் பண்பாட்டை வெளிப்படுத்தும் புகைப்படங்களை கலெக்டரின் எக்ஸ் வலைத்தள @VNRCollectorக்கு டேக் செய்யலாம் அல்லது photocontestkarisal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். சிறந்த புகைப்படங்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்படும். டிச.8, 9ல் நடக்கும் இந்நிகழ்வில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இலக்கிய ஆர்வமுள்ளவர்கள், படைப்பாளிகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம், என்றார்.
