UPDATED : டிச 05, 2023 12:00 AM
ADDED : டிச 05, 2023 09:35 AM
ஆனைமலை:
ஆனைமலை அருகே, பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை சார்பாக குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், மாதந்தோறும் திறம்படக் கேள் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.அதன், 28வது அமர்வாக, ஒரிகாமி எனும் பேப்பர் மடிப்புக் கலை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்பட்டது. ஒரிகாமிக் கலையை தமிழகத்தின் தலைசிறந்த ஒரிகாமி கலைஞர் தியாக சேகர் பயிற்சி அளித்தார்.மாணவர்களிடம் அவர் பேசுகையில், ஒரிகாமி என்பது கணிதத்துடன் தொடர்புடைய கலை. இது அன்றாட வாழ்வில் அதிகப்படியான இடங்களில் பயன்படுகிறது. வீட்டில் பயன்படுத்தும் தீப்பெட்டி கூட காகிதத்தில் மடிப்பை பயன்படுத்தும் ஒரிகாமி கலையே. ஜப்பானில் இருந்து இக்கலை உலகம் முழுக்க பரவியது, என்றார். தொப்பி, சிறிய பெட்டி, உலக அமைதிச் சின்னமான கொக்கு உள்ளிட்ட பல பொருட்களை குழந்தைகளுக்கு செயல் விளக்கம் அளித்தும், செய்ய வைத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழாசிரியர் பாலமுருகன் கூறுகையில், பாடங்களை கற்பிப்பதோடு ஆசிரியரின் பணிகள் முடிவதில்லை. இது போன்ற பல கலைகளை குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும். இக்கலையை தொடர்ந்து கற்றுக் கொள்வதோடு நாள் தோறும் செய்ய வேண்டும், என்றார். தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார். இதில், 40 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
