UPDATED : டிச 06, 2023 12:00 AM
ADDED : டிச 06, 2023 11:11 AM
ஈரோடு:
தமிழகத்தில் தட்டச்சு தேர்வு (டைப் ரைட்டிங்) சனி, ஞாயிறு, திங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை நடத்துவதை வேறு நாளுக்கு மாற்ற வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தட்டச்சு - கணினி பள்ளிகள் சங்க மாநில தலைவர் செந்தில், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியதாவது:
தமிழகத்தில், 4,500க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட தட்டச்சு பயிலகங்கள் இயங்குகின்றன. இவற்றில் ஆண்டுக்கு இரு முறை பிப்., மற்றும் ஆக., மாதங்களில் தேர்வு நடக்கிறது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை, 2.5 லட்சம் மாணவர் எழுதுகின்றனர். தேசிய அளவில் தட்டச்சு தேர்வில் தமிழகத்தில்தான் அதிக மாணவர்கள் பங்கேற்கின்றனர்.வழக்கமாக சனி, ஞாயிறு மட்டுமே தேர்வு நடக்கும். இந்தாண்டு சனி, ஞாயிறு, திங்கள் கிழமை நடத்துவதாக அறிவித்துள்ளதை மாற்றி அறிவிக்க வேண்டும். தட்டச்சு தேர்வில், பள்ளி முதல் கல்லுாரி மாணவர் வரை பங்கேற்பர். திங்களன்று தேர்வு நடந்தால், தட்டச்சு தேர்வை தவிர்க்கும் நிலை ஏற்படும்.எனவே சனி, ஞாயிறுகளில் மட்டும் தேர்வு நடத்த வேண்டும். நகர பகுதியில் பாலிடெக்னிக் கல்லுாரியில் தான் தேர்வெழுத வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தி, 35, 40 கி.மீ.,க்கு அப்பால் தேர்வு எழுத செய்யும் முறையை மாற்ற வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
