UPDATED : டிச 11, 2023 12:00 AM
ADDED : டிச 11, 2023 10:33 AM
திருத்தணி:
மிக்ஜாம் புயலால், கடந்த 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை கனமழை பெய்தது. இதனால், பள்ளிகளில் மழைநீர் தேங்கியது.இதனால், நேற்று முன்தினம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, புயல் மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் சீரமைப்புக்கு, 1 கோடி ரூபாய் நிதியை பள்ளிக்கல்வி துறை ஒதுக்கியுள்ளது.மேலும், பள்ளிகள் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள, 10 இணை இயக்குனர்கள், சிறப்பு அதிகாரிகளாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சீரமைப்பு பணிகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் ராமன், தனியார் பள்ளிகள் இணை இயக்குனர் ராமசாமி ஆகியோர் திருமழிசை, பூந்தமல்லி, திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் உள்ளிட்ட பள்ளிகளில், சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.இதில் வகுப்பறை மற்றும் அனைத்து கட்டடங்கள், சுற்றுச்சுவர்கள், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதா, குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என பார்வையிட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மாணவர்களுக்கு புத்தகம், சீருடை இழந்த மாணவர்களுக்கு, அவற்றை வழங்க மாவட்ட கல்வி அலுவலர்கள் வழியே செவ்வாய்க்கிழமைக்குள் வழங்க ஏற்பாடு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினர்.இதில், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் நாகலிங்கம் மற்றும் கல்வி அதிகாரிகள் உடனிருந்தனர்.
