தலைவர், 10 உறுப்பினர் பதவி காலி: டி.என்.பி.எஸ்.சி., செயல்பாடு மந்தம்
தலைவர், 10 உறுப்பினர் பதவி காலி: டி.என்.பி.எஸ்.சி., செயல்பாடு மந்தம்
UPDATED : டிச 12, 2023 12:00 AM
ADDED : டிச 12, 2023 11:53 AM
தமிழக அரசு துறைகளில், இளநிலை உதவியாளர் பணி முதல், குரூப் - 1 அதிகாரிகள் பதவிகள் வரையிலான காலி பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., என்ற, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.தேர்வுகளை அறிவிப்பது, முடிவுகள் வெளியிடுவது, கவுன்சிலிங் நடத்துவது போன்றவை குறித்து, ஆண்டுதோறும் உத்தேச கால அட்டவணை வெளியிடப்படும். அதில், சிறிய தேதி மாற்றங்களுடன், தேர்வுகள் நடத்துவது வழக்கம்.இந்த தேர்வுகளை நடத்த, டி.என்.பி.எஸ்.சி., செயலர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி என, 2 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், ஆணையத்துக்கு, 14 உறுப்பினர்களும், ஒரு தலைவரும் செயல்பட வேண்டும்.இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பதவிகளில், 10 இடங்கள் காலியாக உள்ளன. தலைவர் பதவியும், ஆறு மாதங்களுக்கு மேலாக காலியாக உள்ளது. அதனால், தேர்வுகள் நடத்துவது, அதன் முடிவுகளை வெளியிடுவது, கவுன்சிலிங் நடத்துவது போன்றவற்றிலும், டி.என்.பி.எஸ்.சி.,யின் இதர செயல்பாடுகளிலும் சுணக்கம் ஏற்பட்டுஉள்ளது.குரூப் - 2 மெயின்ஸ் உள்பட பல போட்டி தேர்வு முடிவுகள், உரிய நேரத்தில் அறிவிக்கப்படவில்லை. குரூப் - 4 பணிக்கு, 2ம் கட்ட கவுன்சிலிங் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அடுத்த ஆண்டு குரூப் - 4 தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.குழப்பத்தில் உள்ளோம்போட்டி தேர்வர்கள் கூறியதாவது:
பட்டப்படிப்பு முடித்து, அரசு வேலையில் சேர்ந்து விடலாம் என்ற கனவுடன், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்காக மாதக்கணக்கில் பயிற்சி எடுத்து வருகிறோம். அதற்கு பலன் கிடைக்காத நிலையில், டி.என்.பி.எஸ்.சி.,யின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளதால், தேர்வு மற்றும் ரிசல்ட் பணிகள் மிகவும் மந்தகதியில் நடக்கின்றன. அதனால், பயிற்சிகளை தொடர்வதா அல்லது கைவிட்டு விட்டு, வேறு தனியார் நிறுவன பணிகளுக்கு செல்வதா என்ற குழப்பத்தில் உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
