UPDATED : டிச 13, 2023 12:00 AM
ADDED : டிச 13, 2023 09:34 AM
சென்னை:
வேதங்களே பாரதத்தின் தாய் என கவர்னர் ரவி பேசினார்.மகரிஷி சாந்திபினி ராஷ்ட்ரிய வேத வித்யா பிரதிஷ்தான் மற்றும் யோகக்ஷேமா அறக்கட்டளை சார்பில், வேத சம்மேளனம் என்ற நிகழ்ச்சி, சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது.நிகழ்ச்சியை துவக்கி வைத்து, கவர்னர் ரவி பேசியதாவது:
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ரிஷிகளால் உருவாக்கப்பட்ட வேதங்கள் தான், பாரத பண்பாட்டிற்கு சாரமாகவும், பாரதத்தின் தாயாகவும் உள்ளன. அவை, உலகின் படைப்புகள் அனைத்தும் சமம் என்பதால், நாம் தர்ம சிந்தனைகளால் மேலோங்கி இருந்தோம்.18ம் நுாற்றாண்டு வரை நெசவு, கப்பல் கட்டுமானம், இரும்பு உள்ளிட்ட அனைத்து தொழில்களிலும் மேலோங்கி, உலக உள்நாட்டு உற்பத்தியில் முதலிடத்தில் இருந்தோம். பின், காலனி ஆதிக்கத்தால், நம் மரபின் வேர்களை இழந்தோம்.மேற்கத்திய நாடுகள், அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேறிய அதே நேரத்தில், ஆயுத குவிப்பிலும் ஈடுபட்டு, அமைதியை இழக்கின்றன. கொரோனா சமயத்தில் வளர்ந்த நாடுகள் பயந்தன. கண்டறிந்த தடுப்பூசியையும் லாப நோக்கத்துடன் விற்றன.நம் விஞ்ஞானிகள் கண்டறிந்த தடுப்பூசிகள் தான், 150 நாட்டு மக்களை காத்தன. இதுவே நம் வேத சிந்தனை. நம் வேத கருத்துகளை நாம் உணரத் துவங்கி, விழித்தெழுகிறோம். விரைவில் உலகை வழிநடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், பிரதிஷ்தான் இயக்குனர் சஞ்சய் ஸ்ரீவஸ்தவா தலைமை வகித்தார். யோகக்ஷேமா அறக்கட்டளை அறங்காவலர் ஆராவமுதாச்சாரியார், ஜெயின் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுரேஷ்குமார் சஞ்செதி, கர்நாடகா சமஸ்கிருத பட்டாசாலா பள்ளி முதல்வர் பாண்டுரங்க புரோகித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
