உறைவிட பள்ளியில் நீதிபதிகள் நேரடி ஆய்வு செய்ய வேண்டும்
உறைவிட பள்ளியில் நீதிபதிகள் நேரடி ஆய்வு செய்ய வேண்டும்
UPDATED : டிச 20, 2023 12:00 AM
ADDED : டிச 20, 2023 09:55 PM
கோலார்:
மாலுார் யலுவஹள்ளி மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளியில் நடந்த அவமான சம்பவம் எங்கும் நடக்க கூடாது. மாவட்ட, தாலுகா நீதிபதிகள் மாணவர் விடுதிகளில் நேரில் பார்வையிட வேண்டும். இதை எஸ்.ஐ.டி., என்ற சிறப்பு புலனாய்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய சமூக நலத்துறை இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.கோலார் மாவட்டம், மாலுார் யலுவஹள்ளி மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளியை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, கோலார் பா.ஜ., எம்.பி., முனிசாமி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.பின், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:
மாணவர்களை செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய வைத்திருப்பது மனித சமுதாயத்திற்கும், மாணவ சமுதாயத்துக்கும் இழைக்கப்பட்ட பெரிய அவமானம் ஆகும். இச்சம்பவம், யாருடைய மொபைல் போனில் இருந்து எடுக்கப்பட்டது; எப்போது சமூக வலைதளங்களில் பரப்பப் பட்டது. எல்லா சம்பவங்களும் சமூக நலத் துறை இணை இயக்குனருக்கு நன்றாக தெரியும். தெரிந்தும் அதனை மூடி மறைக்க பார்த்துள்ளார்.மாணவர் விடுதிகளில் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர் என யாராக இருந்தாலும் அவர்களை துன்புறுத்தி, இதுபோன்ற செயலை செய்ய வைக்கலாமா. இதற்காகவா, அவர்களின் பெற்றோர் மாணவர் விடுதியில் சேர்த்தனர்.இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர், ஜில்லா பஞ்சாயத்து தலைமை செயலர், சமூக நலத்துறை அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட நீதிபதிகள், தாலுகா நீதிபதிகளும் ஒவ்வொரு மாணவர் விடுதிகளுக்கும் சென்று அவர்களின் நிலைமைகள் பற்றி அறிய வேண்டும். உரிய அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும்.இப்பிரச்னையில், மாநில முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இப்பிரச்னையில் எந்த அதிகாரி தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இதன் மீதும் எஸ்.ஐ.டி., விசாரணை தேவை.மாலுார் தாலுகாவில் மட்டுமல்ல, கர்நாடகாவில் அனைத்து தாலுகாவிலும் உள்ள மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளியில் மாணவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக தெரிகிறது. எனவே, அனைத்து உறைவிட பள்ளியில் உள்ள மாணவர்கள் பிரச்னைகளை கேட்டறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
