புத்தக கண்காட்சியில் இடம்பெற வழக்கு; பபாசி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
புத்தக கண்காட்சியில் இடம்பெற வழக்கு; பபாசி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 10:22 PM
சென்னை:
சென்னை புத்தக கண்காட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பதிப்பாளர்களும் இடம்பெறுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு மற்றும் பபாசி அமைப்பு பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்ட மேதை அம்பேத்கர் குறித்த புத்தகங்களை அதிக அளவில் வெளியிடும், சென்னையைச் சேர்ந்த வாய்ஸ் ஆப் புத்தா பதிப்பகத்தைச் சேர்ந்த செந்தமிழ்செல்வி மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த எழுச்சி பதிப்பகத்தைச் சேர்ந்த பிரதீப் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள்:
சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் கலெக்டர்கள் வாயிலாக, புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. சென்னையில் மட்டும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கமான பபாசி என்ற அமைப்பு நடத்துகிறது. இதற்கு, அரசு நிதி உதவி வழங்குகிறது.சென்னை புத்தக கண்காட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நடத்தும் பதிப்பகங்களுக்கு, போதிய அளவில் அரங்குகள் ஒதுக்குவது இல்லை. பபாசி உறுப்பினர்களுக்கு 50 சதவீத சலுகையில், அரங்குகள் ஒதுக்கப்படுகின்றன.எங்களைப் போன்றோருக்கு அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; தாமதமாகவும் ஒதுக்கப்படுகின்றன. எனவே, சென்னை புத்தக கண்காட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பதிப்பாளர்கள் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளன.மனுக்கள், நீதிபதி அனிதா சுமந்த் முன், விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில் பதில் அளிக்க, கூடுதல் பிளீடர் துரைராஜ் அவகாசம் கோரினார். இந்த வழக்கில் பபாசியையும் சேர்த்து, நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார்.மனுதாரர்கள் தரப்பில், கடைசி தேதிக்கு முன் உரிய கட்டணத்துடன் விண்ணப்பங்களை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, ஜனவரி 2க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
