அறிவியல் வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்குவது கணிதம்: தேசிய கருத்தரங்கில் தகவல்
அறிவியல் வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்குவது கணிதம்: தேசிய கருத்தரங்கில் தகவல்
UPDATED : டிச 25, 2023 12:00 AM
ADDED : டிச 25, 2023 10:43 AM
கோத்தகிரி:
நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்குவது கணிதம் என, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.கோத்தகிரி விஸ்வ சாந்தி மெட்ரிக்., பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தேசிய கணிதம் தினம் கருத்தரங்கு நடந்தது. பள்ளி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார்.அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் கருத்தாளர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
கணித மேதை ராமானுஜம், 1887ல் ஈரோட்டில் பிறந்தார். கும்பகோணத்தில் பள்ளி கல்வி படித்தார். அவர், 7ம் வகுப்பு படிக்கும் போதே, கல்லுாரி மாணவர்களுக்கு பாடம் போதித்தார். கல்லுாரி படிப்பை பாதியில் நிறுத்திய இராமானுஜம், லண்டன் டிரினிட்டி கல்லுாரியில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார். முதல் ஆண்டிலேயே, 21 ஆய்வு கட்டுரை சமர்ப்பித்த அவர், நான்கு ஆண்டுகளில், மூன்றாயிரம் கணித சமன்பாடுகளை கண்டறிந்தார்.அவரது கணக்கு படைப்புகள், ராமானுஜம் நோட்டுப் புத்தகங்கள் என்ற பெயரில் ஆய்வு பொருளாக உள்ளது. நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, ஆதாரமாக விளங்குவது கணிதம். ஆனால், தற்போது பல கல்லூரிகளில் கணிதத்துறை மாணவர்களின் வருகை இல்லாமல் மூடப்படும் நிலை உள்ளது. இன்றைய கல்வி அமைப்பு, நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், ஒரு ஆண்டில், பல்லாயிரம் மாணவர்களுக்கு கணிதம் நிகழ்ச்சியை நடத்திய, ஆசிரியர் ராஜூவுக்கு கவுரவம் அளிக்கப்பட்டது. ஆசிரியை ராதா நன்றி கூறினர்.
