UPDATED : ஜன 07, 2024 12:00 AM
ADDED : ஜன 08, 2024 08:35 AM
சென்னை:
தமிழகத்தில் உரிமையியல் நீதிமன்றங்களில், உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக இருந்த, 245 இடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், முதல்நிலை தகுதி தேர்வு, கடந்த ஆண்டு ஆகஸ்ட், 19ல் நடந்தது.இந்த தேர்வில், 12,000 பேர் பங்கேற்றனர். இதற்கான ரிசல்ட் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியானது. அதில், 2,500 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு, நவ.,4 மற்றும், 5ம் தேதிகளில் பிரதான தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், கடந்த மாதம் முடிந்த பிறகும் தேர்வு முடிவு அறிவிக்காமல் தாமதமானது. இதுகுறித்து, நம் நாளிதழில், கடந்த, 3ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, உரிமையியல் நீதிபதி பதவிக்கான பிரதான தேர்வு முடிவை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.அதன்படி, அடுத்து நடக்க உள்ள நேர்முக தேர்வுக்கு, 472 பேர் தேர்வாகி உள்ளனர். ஆனால், நேர்முக தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில், ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு வரும் 22ம் தேதி நடத்தப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.